Friday 13 April 2012

கண்ணில் பூ விழுதல்..

கண்ணில் பூ விழுதல்..


நமது கண்ணின் கருவிழியில் வெண்படலம் ஏற்படுவதையே கண்ணில் பூ விழுந்துள்ளது எனக் கூறுவர். பல்வேறு காரணங்களினால் நமது விழித்திரையில் ஒளி ஊடுறும் தன்மை குறைவதே இதற்குக் காரணம். இதைத்தான் ஆங்கிலத்தில் கேட்ராக்ட் (cataract) என்று கூறுவர். நோய், கண்ணில் அடிபடுதல், பரம்பரைக் கூறு மற்றும் வயதின் காரணமாகவும், தொடர்ந்து வெளிச்சத்தையே பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்த குறைபாடு உண்டாகும். 
இதனால் விழித்திரையில் கொஞ்சம் கொஞ்சமாய் ஒளி ஊடுறுவும் தன்மை குறைந்து ஒரு கட்டத்தில் முழுமையான பார்வை இழப்பு ஏற்பட்டுவிடும். இதற்கு நவீன அறிவியலில் அறுவை சிகிச்சை மூலமாக புதிய செயற்கை கண் வில்லையை வைப்பதுதான் தீர்வாகக் கூறப் படுகிறது. தமிழில் இதனை கண்ணில் பூ விழுதல், விழிப்புரை , கண்புரை , கண்திமிரம் என்றும் அழைப்பர். 
இந்த குறைபாடு பெரும்பாலும் புரதத்தன்மை இழப்பால் ஏற்படுகிறது. கண்ணில் பூ விழுந்தால் தலைவலியோ கண் சிவப்பாக மாறுவதோ இருக்காது. சிலருக்கு அடிக்கடி கண்களில் நீர் வரலாம். பார்வையின் அளவு மிகவும் குறைந்து காணப்படும்.சூரிய ஒளி நேராக கண்களை தாக்குவதும், கண்களுக்கு அதிக வெப்பம் தரக்கூடிய வேலையைச் செய்பவர்களுக்கும் கண்ணில் பூ விழ அதிக வாய்ப்புக்கள் உள்ளன. 
நவீன மருத்துவத்தில் இந்தக் கண்ணில் பூ விழுவதை குணமாக்க மருந்து கிடையாது என்பது தான் உண்மை. நேரடியாக அறுவைச் சிகிச்சையின் மூலம் பாதிக்கப் பட்ட விழித்திரையை நீக்கிவிட்டு அந்த இடத்தில் செயற்கை விழித்திரையை பொறுத்துவதன் மூலம் மீண்டும் பார்வையைப் பெறமுடியும். எனினும் நமது முன்னோர்கள் இதற்கான தீர்வு ஒன்றினை அருளியிருக்கின்றனர் என்பது ஆச்சர்யமான ஒன்று. 
தேரையர் தனது நூலான "தேரையர் வைத்திய சாரம்" என்னும் நூலில் கண்ணில் பூ விழுதலை நிவர்த்திக்கும் முறை ஒன்றினை அருளியிருக்கிறார்.

பாரடா நற்தேனில் சங்கா லாட்டி
     பருங்குன்றி மணியது சோலிரண்டு போதும்
நேரடா மண்டலந்தான் விழியிற் போடு
     நில்லரிது நில்லரிது பூவிட்டோடும்
மாரடா திரோதாயி மாய்கை தள்ளு
    மகத்தான என்குருவின் முறை தப்பாது
சேரடா இளவென்னீர் சாதங் கொள்ளு
     சேராதே புளிப்புகையுந் தள்ளிப் போடே

சுத்தமான தேனில், சங்கு கொண்டு உரைத்து ஒரு குன்றியளவு தினம் இரண்டு வேளையாக கண்ணில் போடவேண்டும் என்கிறார்.இப்படி தொடர்ச்சியாக நாற்பத்தெட்டு நாட்கள் செய்து வந்தால் கண்ணில் விழுந்துள்ள பூ அகன்று விடுமாம். இதற்கென சில பத்திய முறைகளும் உள்ளன, இந்த கால கட்டத்தில் உடலுறவு தவிர்க்க வேண்டுமாம். மேலும் சாதத்தில் சுடு நீரை விட்டு சாப்பிடச் சொல்கிறார். புளி, புகை போன்றவைகளும் தவிர்க்க வேண்டுமாம்.
எளிமையான அதே நேரத்தில் ஆச்சர்யமான தீர்வுதானே..... 
எனினும் அந்த காலகட்டத்தில் கிடைத்த பொருட்களைக் கொண்டு தேரையரால் அருளப் பட்ட இம் முறைகளை தற்போதை நவீன அறிவியலோடு இணைத்து ஆராய்ந்து மேம்படுத்தினால் எளிய செலவில்லாத மருத்துவ தீர்வு ஒன்றினை நம்மால் முன் வைக்க முடியும். ஆர்வமுள்ளவர்களும், ஆய்வாளர்களும் இது தொடர்பாய் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டால் நன்மை கிடைக்கும்.
இது ஒரு தகவல் பகிர்வு மாத்திரமே, தீர்வு இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment