Friday 13 April 2012

மூச்சுக்கலை - வாய்வழி சுவாசம்

மூச்சுக்கலை - வாய்வழி சுவாசம்


நாம் எதை செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளவதைப் போலவே, எதை செய்யக் கூடாது என்பதையும் அறிந்து கொண்டோமானால், நம்முடைய பாதி இடர்பாடுகளை எளிதில் களைந்து விட முடியும்.
அந்த வகையில் இன்று வாய்வழி சுவாசம் பற்றி பார்ப்போம்.
மூக்கு வழி சுவாசம் நடக்கும் போது எதற்காக வாய்வழி சுவாசம் என்ற கேள்வி வருவது இயல்பே. சுவாசப் பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று அல்லது வேறு காரணங்களினால் மூக்கின் வழியே சுவாசிக்க இயலாத சூழலில், அல்லது தவிர்க்கவே இயலாத தருணங்களில் ஒரு மாற்றாக வாய்வழி சுவாசம் அமைந்திருக்கிறது.
மூக்கின் வழியே சுவாசிக்கும் போது உள்ளிழுக்கப் படும் காற்றில் உள்ள தூசுக்கள், மூக்கின் உட்புறம் அமைந்துள்ள நுண்ணிய ரோமங்களினால் வடிகட்டப் படுகிறது. இதற்கு அடுத்த நிலையில் Mucus திசுக்கள் காற்றில் உள்ள உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை தடுத்து விடுகிறது. 
இந்த நிலையில் வடிகட்டப்பட்ட காற்றானது, வெதுவெதுப்பாக்கப் பட்டு சுவாச குழாய்களுக்குள் அனுப்பப் படுகிறது.மூக்கின் வழி சுவாசத்தில் காற்றானது இத்தனை தரக் கட்டுப்பாடுளை எதிர்கொள்கிறது. இவ்வாறு அனுப்பப் படும் காற்றானது நுரையீரலை அடையும் போது தூய்மையானதாகவும், செறிவானதாகவும் இருக்கிறது.
ஆனால் வாய்வழி சுவாசத்தில் இவை எதுவும் இல்லாமல், காற்று நேரடியாக சுவாசகுழாய்களில் பாய்கிறது. தூய்மை செய்யப் படாத குளிர்ந்த் காற்று நுரையீரலில் பாயும் போது அங்கே ஒவ்வாமையும், தேவையற்ற தொற்றுகளும் உண்டாகிறது.இதனால் என்ன விளைவுகள் உண்டாகும் என்பதை இன்னேரம் நீங்களே யூகித்திருப்பீர்கள். 
ஆம், நாம் எதிர் கொள்ளும் பற்பல நோய்களுக்கு மூல காரணம் இந்த வாய்வழி சுவாசம்தான். இவை எல்லாம் ஒரே நாளில் வருவதில்லை, ஆண்டாண்டு கால வாய்வழி சுவாசத்தின் விளைவே இந்த நோய்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டுகிறேன். 
நம்மில் கணிசமானவர்கள் வாய்வழி சுவாசக்காரர்கள் என்பது வருத்தமான செய்தி. இதை நாம் உணராமலே செய்து கொண்டிருக்கிறோம். இதை உணர்ந்து வாய் வழி சுவாசத்தை நிறுத்துவது என்பதும் நம் கையில்தான் உள்ளது. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே இதை கவனித்து கூறி திருத்தினால் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். 
உறங்கும் போதும் பலர் வாய்வழி சுவாசத்தையே கொண்டிருக்கிறோம். இதனை தவிர்க்க உறங்கும் போது தலை முன்னால் வந்து கவிழ்ந்த நிலையில் உறங்கப் பழகினால் வாய்வழி சுவாசத்தை எளிதில் தவிர்க்க முடியும். தொடர்ச்சியன வாய் வழி சுவாசத்தினால் மூக்கில் உள்ள நாசி துவாரங்கள் பயன்பாடு இல்லாமல் நோய் தொற்றுக்கு ஆளாகி விடும் வாய்ப்பு இருக்கிறது. இது மேலும் தேவையற்ற துயரங்களையே தரும்.
மூக்கு வழி சுவாசம் உடலுக்கும், உயிருக்கும் புத்துணர்ச்சியைத் தருகிறது. மாறாக வாய்வழி சுவாசம் உடலுக்கும், உயிருக்கும் நோய்களையும், அசதியையுமே கொண்டு தரும் என்பதால் உடனடியாக சுவாச முறையை ஆராய்ந்து நாசி வழி சுவாசத்தினை மேற்கொள்ளுதல் அவசியம்.

No comments:

Post a Comment