Friday 13 April 2012

உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும்....தொடர்ச்சி!.

உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும்....தொடர்ச்சி!.


நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

வள்ளுவரின் இந்த வாக்கு, நம் முன்னோர்கள் நீரின் மகத்துவத்தினை எந்த அளவிற்கு உணர்ந்திருந்தனர் என்பதற்கான சான்று. நவீன அறிவியல் தெளிவுகளின் படி உலகில் இருக்கும் மொத்த நீரில் மூன்று விழுக்காடு நீர்தான் சுத்தமானது, என்றும் அதில் இரண்டு விழுக்காடு பனிக் கட்டியாகவும், மீதமிருக்கும் ஒரு விழுக்காடே நாம் அனைவரும் பயன்படுத்துவதாகவும் இருப்பதாகக் கூறுகிறது. எனவே தண்ணீரை வீணாக்கிடாமல் பயன் படுத்திட நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டியது அவசியம். இதனை இங்கே குறிப்பிடக் காரணம் இன்று உலக தண்ணீர் தினமாக அனுசரிக்கப் படுகிறது
நம் முன்னோர்கள் வகுத்த பதினெட்டு வகையான தண்ணீரில் இன்று ஊற்றுநீர், பாறைநீர்,அருவிநீர், அடவிநீர், வயல்நீர், நண்டுக்குழி நீர் ஆகியவற்றின் குண இயல்புகளை பார்ப்போம். இவை யாவும் தேரையர் அருளிய “பதார்த்த குண சிந்தாமணி” என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.
ஊற்றுநீர்

ஊற்றுநீர் பித்தமொழிக்கு மினிப்பாகும்
ஆற்றிவிடுந் தாகத்தை யப்பொழுதே - கூற்றுவிழிக்
கொம்ப ரிடையாய் குணகுணங்க ளைத்தெளிவாய்
நம்பியுல கோரறிய நாட்டு

ஊற்று நீரை அருந்துவதால் பித்தமும் தாகமும் நீங்கும் என்கிறார் தேரையர்.

பாறைநீர்

பாறைமீ தூறுகின்ற பானீயந் தன்னையுண்டால்
ஏறுமுடலமெல்லா மீரிப்பே - வீறுகின்ற
வாதகோபத் துடனே பாறாச்சுரமுமெழும்
ஓதசனத் துண்டா முவர்ப்பு.

நீர்க்க டுப்பெழு நெஞ்சினிற் சீழ்க்கட்டும்
பார்க்கிற் பித்தம் பலபிணி சூழ்வதாந்
தீர்க்க வாயுவைத் தீர்த்திடுஞ் சிந்தைநோய்
தாக்குஞ் சிக்கான் றனிப்பாறைத் தோயமே.

கரும்பாறைத் தண்ணீர் கனசோபை வாந்தி
பெரும்பாடு பித்தசுரப் பீடை யருந்தயக்க
நீர்க்கடுப்பு தாகமிவை நீக்கிவைத்த புடுதியழ
கேற்றகவளர்ப் பிக்கு மெய்யை யெண்.

பாறை நீரை மூன்று வகையாக கூறுகிறார். அவை பாறை நீர், சுக்கான் பாறை நீர் மற்றும் கரும் பாறை நீர் என மூன்று வகைப்படும். சாதாரண பாறை நீரால் ஈரிப்பு, வாதம், கோபம், சுரம் ஆகியவை உண்டாகுமாம். சுக்கான் பாறை நீரை அருந்துவதால் நீர்க்கடுப்பு, நெஞ்சிற் சீழ்க்கட்டு, பலபிணி, பித்தமும் உண்டாகுமாம்.  
இந்த மூன்று வகைகளில் அருந்துவதற்கு சிறப்பானது கரும்பாறை நீர் என்கிறார். இந்த நீரை அருந்துபவர்களுக்கு சோபை, வாந்தி, பெரும்பாடு, பித்தசுரம், மயக்கம், நீர்க்கடுப்பு, தாகமும் போவதுடன் புத்தி விருத்தியும், மேனி அழகும் உண்டாகுமாம். 

அருவிநீர்

அருவிநீரின் மேகம் கற்றுஞ்சி லேக்ஷ்மம்
வருவிக்கும் ரத்தபித்தமாற்றும் - பெருமிதமாம்
வேலை யுலகின் மிகுந்தபல முண்டாக்குங்
காலை மலர்முகத்தாய் காண்.

அருவி நீரை அருந்துவதால் மேகம், ரத்தபித்தமும் நீங்குவதுடன், சிலேட்டுமமும் பலமும் உண்டாகுமாம்.

அடவிநீர்

அடவிப் புனலா லதிசீதா திக்கம்
இடலிற கனைப்பிளைப்பு முண்டாம் - உடல்வயிறு
நாவிவ் விடம்வெதும்பு நண்ணுந் தலைப்பாரந்
தீவவ்வ டற்சுரமாந்தேர்.

அடவி நீரை அருந்துவதால் சலதோசமும், உடல் கனப்பும், இளைப்பும், தலை பாரமும், சுரமும், உடல்,வயிறு ஆகிய இடங்களில் அனலும் உண்டாகும் என்கிறார்.

வயல்நீர்

மேகம்போந் தாகம்போம் வெட்டையுட னேசுரம்போந்
தேகங் குளிர்ச்சியுற்றுத் தேறுங்காண் - சோகமெல்லாம்
ஆறு மிரத்தகய மாறுநோய்க் கோபமிக
மாறும் வயற்புனக்கு வை.

வயல் நீரை அருந்துவதால் மேகம், தாகம், வெட்டை, சுரம், இரத்தகயம், கோபம், சோபமும் போகும்.அத்துடன் உடலில் குளிர்ச்சியும் உண்டாகுமாம்.

நண்டுக்குழி நீர்

வாந்தியறுந் தாகமது மாறாத விக்கலறுங்
காந்த லெரிவுங் கடிதேகுந் தோய்ந்துவருங்
கண்டுக் குயர்ந்த கனிமொழியே பன்னாளு
நண்டுக் குழிநீரை நாடு.

வாந்தி, தாகம், மாறாத விக்கல், காந்தல், தேக எரிவு ஆகியவை நீங்க வேண்டும் என்று விரும்புபவர்கள், நண்டுக் குழிநீரை தேடி அருந்த வேண்டும் என்கிறார்.

உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும்.

உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும்.


தண்ணீரை சித்தர் பெருமக்கள் பதினெட்டாக பிரித்துக் கூறியதையும், அவை ஒவ்வொன்றும் உடலியல் ரீதியாக நமக்கு எவ்விதமான பலன்களைத் தருகிறது என்பதைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று குளத்து நீர், ஏரிநீர், சுனைநீர், ஓடைநீர், கிணற்று நீர் பற்றி பார்ப்போம். இங்கே பகிரப் படும் தகவல்கள் யாவும் தேரையர் அருளிய “பதார்த்த குண சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து சேகரிக்கப் பட்டவை.

குளத்துநீர்

குளத்துநீர் தானே கொடிதான வாதம்
வளர்த்திவிடு மப்பான் மதுவாங் - குளிர்ச்சியையு
மெத்தவுண் டாக்குமென மேதினியோர் தங்களுக்குக்
கொத்தலரும் பூங்குழலால் கூறு.

தண்டா மரைக்குளத்திற் றங்கு புனலதனால்
உண்டாகும் வாதபித்த முண்மையே - பண்டான
வெக்கையோய் மாறாது வீறுந் தவனமுமா 
மைக்கருங்கண் மாதே வழுத்து

அல்லிக் குளத்தினீ ரக்கினிமந் தப்பேதி
மெல்லச் சொறிசிரங்கு வெப்புடனே - தொல்லுலகில்
தாலுதனி லட்சரமுந் தாதுநஷ்ட முங்கொடுக்குங்
கோல மலர்த்திருவே கூறு

குளத்து நீர் என பொதுவாகச் சொன்னாலும் அதிலும் வேறுபாடுகள் இருப்பதாக கூறுகிறார். குளத்தில் வாழும் நீர்த் தாவரங்களைப் பொறுத்து அந்த குளத்து நீரின் குண இயல்புகள் மாறுபடுமாம். தாமரை அதிகமாக வளர்ந்திருக்கும் குளத்து நீரால் வாதம், பித்தம், வெக்கைநோய், தாகமும் உணடாகுமாம். அல்லி அதிகமாக வளர்ந்திருக்கும் குளத்து நீரால் அக்கினி, மந்தபேதி, சொறிசிரங்கு, வெப்பு, நாவிலச்சரம், தாதுநஷ்டமும் உண்டாகுமாம் இதனால் குளத்து நீரை அருந்துவதை தவிர்க்க வேண்டும். 
பொதுவில் குளத்து நீரை பருகி வந்தால் வாதம், மதுமோகம், குளிர்ச்சி ஆகியவற்றை அதிகம் உண்டாகும் என்கிறார். தேரையரின் தனித்துவமான இந்த தகவலின் பின்னாலிருக்கும் அறிவியல் ஆராயப் படுதல் அவசியம். 

ஏரிநீர்,சுனைநீர்

ஏரிநீர் வாதமிளைத்த துவர்ப்பாகுங்
கூரியதோர் கற்சுனைநீர் கூறுங்காற் - சிரியதோர்
வாதமொடு பித்தமெழும் வைத்தொருநாட்பின்னுண்ணிற்
சீதமில்லை யுட்டினமாஞ் செப்பு.

சுனைப்புனலைத் துய்த்தார்க்குஞ் சூழ்ந்ததிற்றோய்ந்தோர்க்குங்
களைப்புறுசீ தச்சுரமுங்காணும் - வினைக்குரிய
வாதமுறுகத் தால்வருமே நடுக்கலின்னும்
ஓதுபித்த கோபமுமா முன்னு.

ஏரி நீர் வாதத்தையும் துவர்ப்பையும் உண்டாக்குமாம். கற்கள் நிறைந்த சுனை நீரானது வாதத்தையும் பித்தத்தையும் உண்டாக்குமாம். ஆனால் அந்த சுனை நீரை ஒருநாள் வைத்திருந்து அருந்தினால் எந்த கெடுதலும் செய்யாது ஆனால் உடல் சூட்டை உண்டாக்கும் என்கிறார் தேரையர்.

ஓடைநீர்

ஓடை தருநீரை யுண்ணவதி தாகமுமா
மேடையெனத் தோட்பலனு மெத்தவா மோடைமலர்க்
கண்ணா யதுதுவர்ப்புங் காணாமதுரமுமாம்
எந்நாளும் பாரி லியம்பு.

ஓடை நீர் சுவையின் அடிப்படையில் இரண்டாக பிரித்து கூறப் படுகிறது. ஒன்று துவர்ப்புச் சுவையுடைய நீர், மற்றயது இனிப்புச் சுவையுடைய நீர். இந்த இருவகை நீரில் எதை அருந்தினாலும் தாகமும் பலமும் அதிக அளவில் ஏற்படும் என்கிறார் தேரையர்.
கிணற்று நீர்

ஆசாரக் கூபத் தறலா லதிதாகம்
வீசாகச் சூடுபசி மெய்க்காந்தன் - மாசூலை
மெய்யுள்வலி சந்துளைப்பு வீழ்மயக்கஞ் சோபைபித்தம்
பையவரும் மீளையறும் பார்.

கிணறு தோண்டப்படும் நில வளத்தை பொறுத்து கிணற்று நீரை இரு வகையாக பிரிக்கலாம் என்கிறார். ஒன்று உவர் நீர் கிணறுகள், மற்றயது நன்னீர் கிணறுகள். இதில் எந்த வகை நீரை அருந்தினாலும் தாகம், சூலை, சூடி போன்றவை நீங்கி உடலில் வலு உண்டாகுமாம். அத்துடன் சிலேத்துமம், வாதம், மயக்கம், சோபை, பித்தம் ஆகியவையும் நீங்கும் என்கிறார் தேரையர். 
அறிவியல் பெரிதாக வளர்ச்சியடையாத ஒரு காலகட்டத்தில் நமது முன்னோர்கள் நாம் அருந்தும் தண்ணீரிலும் இத்தனை தெளிவுகளை ஆய்ந்தறிந்து அவற்றை நூலாக்கி வைத்திருக்கின்றனர். இவற்றை பயன் படுத்தாமல் அல்லது மேம்படுத்தாமல் போனது நமது தவறே.... இனியாகிலும் இவற்றின் அருமை பெருமைகளை உணர்வதோடு ஆர்வமுள்ளவர்களுக்கு பகிர்வதன் மூலம் நமது முன்னோர்களின் பெருமையை உலகறியச் செய்திட உறுதியேற்க வேண்டுகிறேன்.

உணவு - மழைநீர், ஆலங்கட்டி நீர், பனிநீர், ஆற்றுநீர்.

உணவு - மழைநீர், ஆலங்கட்டி நீர், பனிநீர், ஆற்றுநீர்.


நமது முன்னோர்கள் தண்ணீரை மழைநீர், ஆலங்கட்டி நீர், பனிநீர், ஆற்றுநீர், குளத்துநீர், ஏரிநீர், சுனைநீர், ஓடைநீர், கிணற்று நீர், ஊற்றுநீர், பாறைநீர், அருவிநீர், அடவிநீர், வயல்நீர், நண்டுக்குழி நீர், உப்புநீர், சமுத்திரநீர், இளநீர் என பதினெட்டு வகைகளாய் பிரித்துக் கூறியதை நேற்றைய பதிவில் பார்த்தோம். 
இன்றைய பதிவில் முதல் நான்கு வகைகளான மழைநீர், ஆலங்கட்டி நீர், பனிநீர், ஆற்று நீர் பற்றிய தேரையரின் தெளிவுகளை பார்ப்போம். இந்த பதிவில் பகிரப்படும் தகவல்கள் யாவும் “பதார்த்த குண சிந்தாமணி” என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.

மழைநீர்

சீதமுறுங் குளிர்ச்சி சேருமே சித்தத்துட
போதந் தெளிவாய்ப் பொருந்துங்கா ணாதமோடு
விந்தும் வளர்ந்துவரு மேதினியி லெவ்வுயிர்க்குஞ்
சிந்துமழை நீராற் றெளி.

மழை நீரை தேரையர் மிக உயர்வாகச் சொல்கிறார். இந்த மழை நிரினால்தான் உலகத்தில் உள்ள அத்தனை உயிரினங்களுக்கும் உயிர்ச்சத்து கிடைக்கிறது என்கிறார். இத்தகைய சிறப்பான மழை நீரை சேமித்து வடிகட்டி அருந்த வேண்டுமாம். இப்படி தொடர்ந்து அருந்தி வந்தால் உடல் உஷ்ணம் நீங்கி, அறிவு விருத்தியும் தெளிவும் உண்டாகும் என்கிறார்.

ஆலங்கட்டி நீர்

வெண்மாசி மேகமுடன் வீறும் பெரும்பாடு
கண்மாசிகாந்தல் கடிதகற்றுந் - தண்மீறும்
விற்கற் சுவாசமுடன் மெய்ம்மயக்க முன்போக்குங்
கக்குமா லாங்கட்டி காண்.

சில நேரங்களில் மழை பெய்யும் போது வானில் இருந்து பெரிய அளவிலான பனிக் கட்டிகள் விழுவதை பார்த்திருக்கலாம் இவையே ஆலங்கட்டிகள் என்று அழைக்கப்படும். இந்த ஆலங்கட்டி நீரை சேமித்துவைத்து அருந்துவதால் மேகம்,  பெரும்பாடு, கண்மாசி, காந்தல், விக்கல், சுவாச நோய்கள், மெய்மயக்கம் ஆகியவை நீங்கும் என்கிறார் தேரையர்.

பனிநீர்

பனிச்சலத்தை யெல்லுதயம் பாணஞ்செய் வாரைத்
தனிச்சொறிசி ரங்குகுட்டந் தாபந் - தொனிக்கயங்கால்
முத்தோஷி நீரிழிவு மூடழல்கி ராணியிவை
கொத்தோடு தாழ்ந்தகலுங் கூறு.

பனிநீர் என்பது அதிகாலை வேளையில் வெளியான இடதில் ஒரு பாத்திரத்தை வைப்பதன் மூலம் சேகரிக்கப்படும் நீர். இந்த நீரை சேகரித்த உடன் அருந்த வேண்டுமாம். காலம் தாழ்த்தி அருந்தக் கூடாதாம். இப்படி தொடர்ந்து காலையில் பனி நீரை அருந்தி வருவதால் சொறி, சிரங்கு, குஷ்டம், தாபம், சயம், வாய்வு, முத்தோஷம், நீரிழிவு, அழல் கிராணி ஆகிய நோய்கள் நீங்கும் என்கிறார்.
தற்போது நீரழிவு நோயினால் எல்லா வயதினரும் பாதிப்புக்கு உள்ளாகி வரும் இந்த வேளையில் தேரையரின் இந்த குறிப்பு மகத்தானது. இது தொடர்பாக மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டால் பல புதிய கூறுகள் புலப்படலாம்.
ஆற்றுநீர் 

ஆற்றுநீர் வாத மனலங் கபத்தோடு
தோற்றுகின்ற தாகந் தொலைக்குமே - ஊற்றமிகுந்
தேகத்தி னோயையெல்லாஞ் சீறித் துரத்திவிடும்
போகத்திற் றாதுவுமாம் போற்று.

ஒவ்வொரு ஆற்று நீருக்கும் தனித்துவமான ஒவ்வொரு குணம் இருப்பதாகவும், அவற்றை தொடர்ந்து பருகுவதாலும் அவற்றில் குளிப்பதாலும் உடலுக்கு குறிப்பிடத் தக்க நன்மைகள் கிடைக்கும் என்கிறார். எனினும் பொதுவில் ஆற்று நீரை பருகிவந்தால் வாதம், அனல், கபம், தாகம், எல்லா நோய்களும் தீருமாம். மேலும் தவிர தாது விருத்தியும் உண்டாகுமம் என்கிறார் தேரையர். 

உணவு - தண்ணீரும் அதன் வகைகளும்!

உணவு - தண்ணீரும் அதன் வகைகளும்!


பஞ்சபூதங்களில் ஒன்றான தண்ணீர் நமது உணவின் மிக முக்கியமான அம்சம். இத்தகைய தண்ணீரின் பங்களிப்பு நமது முன்னோர்களின் வாழ்வில் எத்தகைய இடத்தினை கொண்டிருந்தது என்பதை இன்று பார்ப்போம். நமது உடலின் 65 விழுக்காடு நீர் மற்றும் நீர்மங்களினால் ஆனது என்கிறது நவீன அறிவியல். நாம் சாதாரணமாய் நினைக்கும் தண்ணீர் இல்லாத வாழ்க்கையை ஒரு நொடிகூட கற்பனை கூட செய்யமுடியாது. அந்த அளவிற்கு நீர் நமது வாழ்வின் இன்றியமையாத பொருள்.
நம் உடலில் பித்த நீர், கணைய நீர், இரைப்பை நீர், உமிழ் நீர், வியர்வை நீர், இரத்தத்தின் ஊடகமான நீர், சிறு நீர், கண்ணீர், காதுத் திரவம் எனப் பலவகையான நீர்மங்கள் உள்ளன. நாம் அருந்தும் குடிநீர்தான் இத்தகைய நீர்மங்களாய் மாறி உடலை இயக்குகிறது. தண்ணீர் இல்லாமல் சமைக்கப்படும் உணவினை குடல் ஏற்பதில்லை. 
தண்ணீரானது எதனுடனும் சேர்ந்து வினையாற்றும் தன்மையுடையது. பஞ்ச பூதஙக்ளின் மற்ற நான்கு கூறுகளுடன் தண்ணீர் சேரும்போது தன் ஆற்றலை வெளியிடுகிறது. ஒரு உதாரணம் சொல்வதானால், கறையானின் உமிழ்நீர் மண்கலவையோடு சேர்ந்த நிலையில் அசைக்கவும் இலகுவில் கரைக்கவும் முடியாத பெரிய புற்றுகளாக உருவெடுக்கின்றது. 
இந்தப் புற்று மண், நீரும் நிலமும் ஆகிய இரண்டு பூதங்களின் சக்தி வாய்ந்த கலவை. இந்தப் புற்று மண்ணைக் கொண்டு வந்து நீரில் கரைத்து உடம்பில் வீக்கமுள்ள இடங்களில் பூச வீக்கம் நீங்கும், இரத்தக் கட்டு விலகும். உடம்பில், முகத்தில் தடவிக் குளிக்க உடம்பில் உள்ள தேமல், படை நீங்கும் என்கின்றனர் சித்தர் பெருமக்கள். 
நம் உணவிலேயே சத்து மிகுந்தது நீராகாரம். நாம் கடைகளில் வாங்கிக் குடிக்கும் குளிர்பானங்களை விடப் பல மடங்கு சத்துடையது இந்தப் பழஞ்சோற்றுநீர். அதனோடு நாம் துணையாகக் கொள்ளும் வெங்காயமும் ஒரு நீர் செறிந்த பொருளே. வயது ஏற ஏறத் திடப்பொருளைக் குறைத்துத் திரவப் பொருளை அருந்தினால் ஆயுள் அதிகரிக்கும் என்கிறார்கள் சித்தர்கள்.
தண்ணீரின் மருந்துப் பயனைக் கூட்ட வேண்டுமானால் அதனைத் தாமிரப் பாத்திரத்தில் சேகரித்து வைத்திருந்து அருந்த வேண்டும். இப்படி தண்ணீரின் மகத்துவத்தை சொல்லிக் கொண்டே போகலாம்.
நிலத்தின் மேற்பரப்பில் கிடைக்கும் தண்ணீர், நிலத்தின் கீழே கிடைக்கும் தண்ணீர் என இரண்டு வகையாகவே நாம் நீரின் வகையைஅறிந்திருக்கிறோம். ஆனால் நமது முன்னோர்கள் தண்ணீரை அதன் குண இயல்புகளின் அடிப்படையில் பதினெட்டு வகையாக பிரித்துக் கூறியிருக்கின்றனர்.
அவை முறையே....

1 - மழைநீர்
2 - ஆலங்கட்டி நீர்
3 - பனிநீர்
4 - ஆற்றுநீர்
5 - குளத்துநீர்
6 - ஏரிநீர்
7 - சுனைநீர்
8 - ஓடைநீர்
9 - கிணற்று நீர்
10 - ஊற்றுநீர்
11 - பாறைநீர்
12 - அருவிநீர்
13 - அடவிநீர்
14 - வயல்நீர்
15 - நண்டுக்குழி நீர்
16 - உப்புநீர்
17 - சமுத்திரநீர்
18 - இளநீர்

உணவு - எத்தனை சாப்பாடு?, எப்போது சாப்பிடுவது?

உணவு - எத்தனை சாப்பாடு?, எப்போது சாப்பிடுவது?


பழந்தமிழரும், உணவும் என்கிற இந்த நெடுந்தொடரில் இதுவரையில் உணவின் வரலாறு, தன்மை, சுவை, குணநலன்கள் அவை மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் போன்றவைகளைப் பார்த்தோம். உணவை எப்படி உட்கொள்வது, எந்த சமயத்தில் உட்கொள்வது, எந்த வகையான உணவுகளை உட்கொள்வது, உணவையே மருந்தாகவும், மருந்தையே உணவாகவும் கொள்ளுதல் என பல பரிமாணங்களை சித்தர் பெருமக்கள் அருளியிருக்கின்றனர்.

அன்னிய மொழி மற்றும் இனத்தாரின் பாதிப்புகள் நமது வாழ்வில் ஊடுறுவும் வரையில் இந்த வாழ்வியல் நியதிகளை நமது முன்னோர்கள் தீவிரமாய் கடைபிடித்தே வந்தனர். 
தற்போதைய உலகமயமாக்கல் கலாச்சாரத்தில் நமது வேர்களை நாம் மறந்து போய்விட்டோம் என்பது வருந்தத்தக்கது. அந்த வகையில் மறைந்து போன சில நியதிகளை இனிவரும் நாட்களில் பகிர்ந்து கொள்கிறேன். அந்த வகையில் ஒரு நாளைக்கு எத்தனை தடவை உணவை உட்கொள்ளுதல் வேண்டும், எந்த சமயத்தில் உட்கொள்ள வேண்டும் என்கிற தகவலை இன்று பார்ப்போம்.
ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு போதுமானது என்கிறார் தேரையர். தனது "பதார்த்த குண சிந்தாமணி" என்னும் நூலில் இதனை பின் வருமாறு விளக்குகிறார்.

தன்மமி ரண்டேயூண் டப்பிமுக்காற் கொள்ளினினன்
சின்மதலை காளைகடல் சேர்பருவ-தன்மூகுர்த்த
மொன்றுக்கு ணானகுக்கு ளோதுமிரண் டுக்குளுண்பர்
நன்றுக்குத் தீயோர் நயந்து

ஒரு நாளில் இரண்டு வேளைகள் உண்பதே நன்மையளிக்கும். அதற்குமேல் மூன்றாவது காலம் உணவு உண்ன வேண்டும் என்று விரும்புகிறவர்கள் நாளின் முதலாவது உணவை சூரிய உதய நேரத்திலிருந்து சரியாக ஒன்றரை மணி நேரத்திற்குள்ளும், இரண்டாவது உணவை சூரிய உதயத்தில் இருந்து ஆறு மணி நேரத்திற்குள்ளும், மூன்றாவது உணவை சூரியன் மறைந்து மூன்று மணி நேரத்திற்குள்ள்ம் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். இந்த கால முறை தவறி உண்டால் உடலுக்கு தீமை உண்டாகும் என்கிறார்.

என்ன தீமை விளையும்?

மூன்றுநான் காறெண்மு கூர்த்தங் களின்முறையே
ஞான்றுளுண்ணு மந்த நறுமுணவே-தோன்றுடலுக்
கொக்குமித நோயரமு ரோகமுயிர்க் கந்தரஞ்செய்
விக்குமித மாராய்ந்து விள்.

சூரியன் உதய நேரத்திலிருந்து நான்கு மணி நேரதில் உண்ணும் உணவினால் உடலுக்கு மிதமான நோய் ஏற்படுமாம். சூரியன் உதய நேரத்திலிருந்து ஆறு மணி நேரத்துக்கு மேல் உண்ணும் உணவினால் நோய்கள் உண்டாகுமாம்,  மாலையில் சூரியன் மறைந்து மூன்று மணி நேரத்திற்கு மேல் உண்ணும் உணவினால் உயிருக்கு தீங்கு விளையும் என்கிறார்.
தேரையரின் இந்த தெளிவுகளுக்கு பின்னே இருக்கும் அறிவியல் தன்மைகள் ஆய்வுக்குறியவை. எனினும் நமது முன்னோர்கள் இதனை கடைபிடித்து நோயற்ற வாழ்வு வாழ்ந்திருந்தனர் என்பது மட்டும் உண்மை.

உணவும், வகையும் - தாமச உணவு!

உணவும், வகையும் - தாமச உணவு!


ஒருவர் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளே அவரின் குண நலன்களை தீர்மானிக்கிறது என்ற நமது முன்னோர்களின் தெளிவுகளை பார்த்து வருகிறோம். மூன்று வகையான உணவுகள் மூன்று விதமான குண நலன்களுக்கு காரணமாய் இருக்கிறது என்பதையும், முதல் இரண்டு வகை உணவுகள் பற்றி இதுவரை பார்த்திருக்கிறோம்.அந்த வகையில் இன்று தாமச குணத்தை தரும் உணவு வகை பற்றி பார்ப்போம்.
முதலில் தாமச குணம் என்றால் என்ன?, அது எத்தகையது என்பதை பார்த்துவிடுவோம்.
மிதமிஞ்சிய கோபம், அளவு கடந்த காமம், அதிக தூக்கம், மூர்க்கமான முட்டாள்தனம், நிலைத்த மனமின்மை போன்றவற்றையே தாமச குணம் என்கிறார்கள்.
இத்தகைய குண நலன்களை உடையவர்கள் முரடர்களாகவும், எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் முன்கோபிகளாகவும், சிந்தித்து சீர்தூக்கிப் பார்க்கும் திறமின்றி சூழ்நிலை மற்றும் உணர்வுகளுக்கு அடிமையாகி குற்றங்களைச் செய்பவர்களாக இருப்பார்களாம்.
இப்படியான குணத்தை ஒருவருக்கு, அவர் உட்கொள்ளும் உணவுகள்தான் கொண்டு தருகின்றன என்பதை தற்போதை நவீன அறிவியலும் ஆய்வுகளுக்குப் பின்னர் ஒப்புக் கொண்டிருப்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இம் மூன்று வகை உணவுகளின் பட்டியலைக் கொண்டு, இதுநாள் வரை நாம் எத்தகைய உணவுகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம், நமது குணநலன்கள் எத்தகையதாக இருக்கிறது என்பதை சுய பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் நம்மை மேம்படுத்திக் கொள்ளலாம்.


தாமச குணத்தை தரும் உணவுப் பொருட்கள்..

1. வெங்காயம்
2. வெள்ளைப் பூண்டு
3. முருங்கைக் கீரை
4. பசலைக் கீரை
5. கலவைக் கீரை
6. ஆரைக் கீரை
7. சிறு கீரை
8. உருளைக் கிழங்கு
9. பெருவல்லிக் கிழங்கு
10. முள்ளங்கி
11. சிறுவள்ளிக் கிழங்கு
12. மரவள்ளிக் கிழங்கு
13. முருங்கைக் காய்
14. பீர்க்கை
15. வாளவரைக்காய்
16. மொச்சை
17. சுரைக்காய்
18. அவரை
19. கொள்
20. செஞ்சோளம்
21. கருஞ்சோளம்
22. பட்டாணி
23. தட்டைப்பயறு
24. கம்பு
25. வரகு
26. கேழ்வரகு
27. புழுங்கல் அரிசி
28. கத்திரிக்காய்
29. முருங்கைப்பூ
30. ஈச்ச வெள்ளம்
31. பனைவெல்லம்
32. பனங்கற்கண்டு
33. கள் வகைகள்
34. நுங்கு
35. விளக்கெண்ணெய்
36. பருப்புக் கீரை
37. புளிச்சக்கீரை
38. காசினிக்கீரை
39. பனம்பழம்
40. சீதாப்பழம்
41. பண்ணைக் கீரை
42. முந்திரிப்பழம்
43. எருமைப்பால்
44. எருமை தயிர்
45. எருமை வெண்ணெய்
46. எருமை நெய்


இது வரை பழந் தமிழரின் வாழ்வில் உணவு என்பது எத்தகையதாக இருந்தது. உணவின் வகைப்பாடுகள்,அதனால் ஏற்பட்ட வாழ்வியல் கூறுகள் போன்றவற்றைப் பார்த்தோம். 

உணவும், வகையும் - ரஜோ உணவு!

உணவும், வகையும் - ரஜோ உணவு!


நம் முன்னோர்கள் உணவினை குண நலன்களின் அடிப்படையில் மூன்று வகையாக பிரித்துக் கூறியிருப்பதையும், அதில் முதல் வகையான சாத்வீக உணவு பற்றியும் முந்தைய பதிவுகளின் ஊடே பார்த்தோம். அந்த வகையில் இன்று இரண்டாவது வகையான ராஜோ உணவு பற்றி பார்ப்போம்.
சுறுசுறுப்பு, விறுவிறுப்பு, உடல் வலிமை, தான் என்ற திணவு, அதீதமான துணிச்சல், வீரம், காமம், பேராசை, கோபம், மனவெழுச்சிகளின் திடீர் வெளிப்பாடு, மன மாறுதல்களின் திடீர்த் தோற்றம், எதையாவது சாதிக்க வேண்டும் என்ற துடிதுடிப்பு, பரபரப்பு, எதையும் முடித்தே தீருவோம் என்ற வேகம் போன்ற குண இயல்புகள் ரஜோ வகை உணவுகளைத் தொடர்ந்து உண்டு வருவதால் ஏற்படுமாம். 
மேலும், இந்த உலகில் சாதிக்கத் துடிக்கும், வாழத் துடிக்கும், வெற்றி முரசு கொட்டத் துடிக்கும் மனிதர்கள், சமூகங்கள் எல்லாம், இக்குணத்தைப் பெற்றவர்களாக இருப்பார்களாம்.
இவை எல்லாம் சரி தான்.!, எவையெல்லாம் ரஜோ உணவுகள்?, 
நமது முன்னோர்கள் அவற்றையும் தெளிவாக வரையறுத்துக் கூறியிருக்கின்றனர்.


ரஜோ குணப் பொருள்கள்..

1. பச்சை மிளகாய்
2. ஊசி மிளகாய்
3. எலுமிச்சங்காய்
4. எலுமிச்சம்பழம்
5. புளியங்காய்
6. அத்திக்காய்
7. ஆவாரம்பூ
8. வாழைப்பூ
9. அறுகீரை
10. பறங்கி இலை
11. புதீனா
12. பார வெற்றிலை
13. மாகாளிக் கிழங்கு
14. காரக் கருணைக் கிழங்கு
15. கொட்டிக் கிழங்கு
16. கருணைக் கிழங்கு
17. தாமரைக் கிழங்கு
18. சிறு கிழங்கு
19. களிப்பாக்கு
20. கடுகு எண்ணெய்
21. வெள்ளாட்டுப்பால்
22. வெள்ளாட்டுத் தயிர்
23. வெள்ளாட்டு எண்ணெய்
24. வெள்ளாட்டு நெய்
25. ஓமம்
26. கசகசா
27. கலப்பு நெய்
28. கல்யாணப் பூசணிக்காய்
29. கோடைப் பூசணி
30. பன்றிப் புடலங்காய்
31. வெண்டைக்காய்
32. புடலங்காய்
33. கருஞ்சீரகம்
34. காட்டு சீரகம்
35. பிறப்பு சீரகம்
36. லவங்கம்
37. லவங்கப்பட்டை
38. அப்பளாக் காரம்
39. வீட்டு உப்பு
40. புளி
41. மிளகாய்
42. நாய்க்கடுகு
43. செங்கடுகு
44. சிறு கடுகு
45. வெண்கடுகு
46. தனியா
47. கஸ்தூரி மஞ்சள்
48. கஸ்தூரி
49. மஞ்சள்
50. முந்திரிப்பருப்பு
51. மணிலா
52. ஜவ்வரசி
53. துவரம்பருப்பு
54. அன்னாசி
55. மாதுளை
56. கொமட்டி மாதுளை
57. நாக்கில் பட்டால் விறுவிறுவென்று எரிச்சல் தரும் பொருள்கள் எல்லாம் இவ்வகையில் சேரும்.

இப்பொருள்கள் எல்லாம் விறுவிறு, சுறுசுறு குணம் கொண்டவை. உலக வாழ்வில் உள்ளவர்களை, உணர்ச்சிகளத் தூண்டி ஆட்டிப்படைக்கும் குணம் கொண்டவை இவை.