Friday 13 April 2012

உணவு - தண்ணீரும் அதன் வகைகளும்!

உணவு - தண்ணீரும் அதன் வகைகளும்!


பஞ்சபூதங்களில் ஒன்றான தண்ணீர் நமது உணவின் மிக முக்கியமான அம்சம். இத்தகைய தண்ணீரின் பங்களிப்பு நமது முன்னோர்களின் வாழ்வில் எத்தகைய இடத்தினை கொண்டிருந்தது என்பதை இன்று பார்ப்போம். நமது உடலின் 65 விழுக்காடு நீர் மற்றும் நீர்மங்களினால் ஆனது என்கிறது நவீன அறிவியல். நாம் சாதாரணமாய் நினைக்கும் தண்ணீர் இல்லாத வாழ்க்கையை ஒரு நொடிகூட கற்பனை கூட செய்யமுடியாது. அந்த அளவிற்கு நீர் நமது வாழ்வின் இன்றியமையாத பொருள்.
நம் உடலில் பித்த நீர், கணைய நீர், இரைப்பை நீர், உமிழ் நீர், வியர்வை நீர், இரத்தத்தின் ஊடகமான நீர், சிறு நீர், கண்ணீர், காதுத் திரவம் எனப் பலவகையான நீர்மங்கள் உள்ளன. நாம் அருந்தும் குடிநீர்தான் இத்தகைய நீர்மங்களாய் மாறி உடலை இயக்குகிறது. தண்ணீர் இல்லாமல் சமைக்கப்படும் உணவினை குடல் ஏற்பதில்லை. 
தண்ணீரானது எதனுடனும் சேர்ந்து வினையாற்றும் தன்மையுடையது. பஞ்ச பூதஙக்ளின் மற்ற நான்கு கூறுகளுடன் தண்ணீர் சேரும்போது தன் ஆற்றலை வெளியிடுகிறது. ஒரு உதாரணம் சொல்வதானால், கறையானின் உமிழ்நீர் மண்கலவையோடு சேர்ந்த நிலையில் அசைக்கவும் இலகுவில் கரைக்கவும் முடியாத பெரிய புற்றுகளாக உருவெடுக்கின்றது. 
இந்தப் புற்று மண், நீரும் நிலமும் ஆகிய இரண்டு பூதங்களின் சக்தி வாய்ந்த கலவை. இந்தப் புற்று மண்ணைக் கொண்டு வந்து நீரில் கரைத்து உடம்பில் வீக்கமுள்ள இடங்களில் பூச வீக்கம் நீங்கும், இரத்தக் கட்டு விலகும். உடம்பில், முகத்தில் தடவிக் குளிக்க உடம்பில் உள்ள தேமல், படை நீங்கும் என்கின்றனர் சித்தர் பெருமக்கள். 
நம் உணவிலேயே சத்து மிகுந்தது நீராகாரம். நாம் கடைகளில் வாங்கிக் குடிக்கும் குளிர்பானங்களை விடப் பல மடங்கு சத்துடையது இந்தப் பழஞ்சோற்றுநீர். அதனோடு நாம் துணையாகக் கொள்ளும் வெங்காயமும் ஒரு நீர் செறிந்த பொருளே. வயது ஏற ஏறத் திடப்பொருளைக் குறைத்துத் திரவப் பொருளை அருந்தினால் ஆயுள் அதிகரிக்கும் என்கிறார்கள் சித்தர்கள்.
தண்ணீரின் மருந்துப் பயனைக் கூட்ட வேண்டுமானால் அதனைத் தாமிரப் பாத்திரத்தில் சேகரித்து வைத்திருந்து அருந்த வேண்டும். இப்படி தண்ணீரின் மகத்துவத்தை சொல்லிக் கொண்டே போகலாம்.
நிலத்தின் மேற்பரப்பில் கிடைக்கும் தண்ணீர், நிலத்தின் கீழே கிடைக்கும் தண்ணீர் என இரண்டு வகையாகவே நாம் நீரின் வகையைஅறிந்திருக்கிறோம். ஆனால் நமது முன்னோர்கள் தண்ணீரை அதன் குண இயல்புகளின் அடிப்படையில் பதினெட்டு வகையாக பிரித்துக் கூறியிருக்கின்றனர்.
அவை முறையே....

1 - மழைநீர்
2 - ஆலங்கட்டி நீர்
3 - பனிநீர்
4 - ஆற்றுநீர்
5 - குளத்துநீர்
6 - ஏரிநீர்
7 - சுனைநீர்
8 - ஓடைநீர்
9 - கிணற்று நீர்
10 - ஊற்றுநீர்
11 - பாறைநீர்
12 - அருவிநீர்
13 - அடவிநீர்
14 - வயல்நீர்
15 - நண்டுக்குழி நீர்
16 - உப்புநீர்
17 - சமுத்திரநீர்
18 - இளநீர்

No comments:

Post a Comment