Friday 13 April 2012

உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும்....தொடர்ச்சி!.

உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும்....தொடர்ச்சி!.


நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

வள்ளுவரின் இந்த வாக்கு, நம் முன்னோர்கள் நீரின் மகத்துவத்தினை எந்த அளவிற்கு உணர்ந்திருந்தனர் என்பதற்கான சான்று. நவீன அறிவியல் தெளிவுகளின் படி உலகில் இருக்கும் மொத்த நீரில் மூன்று விழுக்காடு நீர்தான் சுத்தமானது, என்றும் அதில் இரண்டு விழுக்காடு பனிக் கட்டியாகவும், மீதமிருக்கும் ஒரு விழுக்காடே நாம் அனைவரும் பயன்படுத்துவதாகவும் இருப்பதாகக் கூறுகிறது. எனவே தண்ணீரை வீணாக்கிடாமல் பயன் படுத்திட நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டியது அவசியம். இதனை இங்கே குறிப்பிடக் காரணம் இன்று உலக தண்ணீர் தினமாக அனுசரிக்கப் படுகிறது
நம் முன்னோர்கள் வகுத்த பதினெட்டு வகையான தண்ணீரில் இன்று ஊற்றுநீர், பாறைநீர்,அருவிநீர், அடவிநீர், வயல்நீர், நண்டுக்குழி நீர் ஆகியவற்றின் குண இயல்புகளை பார்ப்போம். இவை யாவும் தேரையர் அருளிய “பதார்த்த குண சிந்தாமணி” என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.
ஊற்றுநீர்

ஊற்றுநீர் பித்தமொழிக்கு மினிப்பாகும்
ஆற்றிவிடுந் தாகத்தை யப்பொழுதே - கூற்றுவிழிக்
கொம்ப ரிடையாய் குணகுணங்க ளைத்தெளிவாய்
நம்பியுல கோரறிய நாட்டு

ஊற்று நீரை அருந்துவதால் பித்தமும் தாகமும் நீங்கும் என்கிறார் தேரையர்.

பாறைநீர்

பாறைமீ தூறுகின்ற பானீயந் தன்னையுண்டால்
ஏறுமுடலமெல்லா மீரிப்பே - வீறுகின்ற
வாதகோபத் துடனே பாறாச்சுரமுமெழும்
ஓதசனத் துண்டா முவர்ப்பு.

நீர்க்க டுப்பெழு நெஞ்சினிற் சீழ்க்கட்டும்
பார்க்கிற் பித்தம் பலபிணி சூழ்வதாந்
தீர்க்க வாயுவைத் தீர்த்திடுஞ் சிந்தைநோய்
தாக்குஞ் சிக்கான் றனிப்பாறைத் தோயமே.

கரும்பாறைத் தண்ணீர் கனசோபை வாந்தி
பெரும்பாடு பித்தசுரப் பீடை யருந்தயக்க
நீர்க்கடுப்பு தாகமிவை நீக்கிவைத்த புடுதியழ
கேற்றகவளர்ப் பிக்கு மெய்யை யெண்.

பாறை நீரை மூன்று வகையாக கூறுகிறார். அவை பாறை நீர், சுக்கான் பாறை நீர் மற்றும் கரும் பாறை நீர் என மூன்று வகைப்படும். சாதாரண பாறை நீரால் ஈரிப்பு, வாதம், கோபம், சுரம் ஆகியவை உண்டாகுமாம். சுக்கான் பாறை நீரை அருந்துவதால் நீர்க்கடுப்பு, நெஞ்சிற் சீழ்க்கட்டு, பலபிணி, பித்தமும் உண்டாகுமாம்.  
இந்த மூன்று வகைகளில் அருந்துவதற்கு சிறப்பானது கரும்பாறை நீர் என்கிறார். இந்த நீரை அருந்துபவர்களுக்கு சோபை, வாந்தி, பெரும்பாடு, பித்தசுரம், மயக்கம், நீர்க்கடுப்பு, தாகமும் போவதுடன் புத்தி விருத்தியும், மேனி அழகும் உண்டாகுமாம். 

அருவிநீர்

அருவிநீரின் மேகம் கற்றுஞ்சி லேக்ஷ்மம்
வருவிக்கும் ரத்தபித்தமாற்றும் - பெருமிதமாம்
வேலை யுலகின் மிகுந்தபல முண்டாக்குங்
காலை மலர்முகத்தாய் காண்.

அருவி நீரை அருந்துவதால் மேகம், ரத்தபித்தமும் நீங்குவதுடன், சிலேட்டுமமும் பலமும் உண்டாகுமாம்.

அடவிநீர்

அடவிப் புனலா லதிசீதா திக்கம்
இடலிற கனைப்பிளைப்பு முண்டாம் - உடல்வயிறு
நாவிவ் விடம்வெதும்பு நண்ணுந் தலைப்பாரந்
தீவவ்வ டற்சுரமாந்தேர்.

அடவி நீரை அருந்துவதால் சலதோசமும், உடல் கனப்பும், இளைப்பும், தலை பாரமும், சுரமும், உடல்,வயிறு ஆகிய இடங்களில் அனலும் உண்டாகும் என்கிறார்.

வயல்நீர்

மேகம்போந் தாகம்போம் வெட்டையுட னேசுரம்போந்
தேகங் குளிர்ச்சியுற்றுத் தேறுங்காண் - சோகமெல்லாம்
ஆறு மிரத்தகய மாறுநோய்க் கோபமிக
மாறும் வயற்புனக்கு வை.

வயல் நீரை அருந்துவதால் மேகம், தாகம், வெட்டை, சுரம், இரத்தகயம், கோபம், சோபமும் போகும்.அத்துடன் உடலில் குளிர்ச்சியும் உண்டாகுமாம்.

நண்டுக்குழி நீர்

வாந்தியறுந் தாகமது மாறாத விக்கலறுங்
காந்த லெரிவுங் கடிதேகுந் தோய்ந்துவருங்
கண்டுக் குயர்ந்த கனிமொழியே பன்னாளு
நண்டுக் குழிநீரை நாடு.

வாந்தி, தாகம், மாறாத விக்கல், காந்தல், தேக எரிவு ஆகியவை நீங்க வேண்டும் என்று விரும்புபவர்கள், நண்டுக் குழிநீரை தேடி அருந்த வேண்டும் என்கிறார்.

உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும்.

உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும்.


தண்ணீரை சித்தர் பெருமக்கள் பதினெட்டாக பிரித்துக் கூறியதையும், அவை ஒவ்வொன்றும் உடலியல் ரீதியாக நமக்கு எவ்விதமான பலன்களைத் தருகிறது என்பதைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று குளத்து நீர், ஏரிநீர், சுனைநீர், ஓடைநீர், கிணற்று நீர் பற்றி பார்ப்போம். இங்கே பகிரப் படும் தகவல்கள் யாவும் தேரையர் அருளிய “பதார்த்த குண சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து சேகரிக்கப் பட்டவை.

குளத்துநீர்

குளத்துநீர் தானே கொடிதான வாதம்
வளர்த்திவிடு மப்பான் மதுவாங் - குளிர்ச்சியையு
மெத்தவுண் டாக்குமென மேதினியோர் தங்களுக்குக்
கொத்தலரும் பூங்குழலால் கூறு.

தண்டா மரைக்குளத்திற் றங்கு புனலதனால்
உண்டாகும் வாதபித்த முண்மையே - பண்டான
வெக்கையோய் மாறாது வீறுந் தவனமுமா 
மைக்கருங்கண் மாதே வழுத்து

அல்லிக் குளத்தினீ ரக்கினிமந் தப்பேதி
மெல்லச் சொறிசிரங்கு வெப்புடனே - தொல்லுலகில்
தாலுதனி லட்சரமுந் தாதுநஷ்ட முங்கொடுக்குங்
கோல மலர்த்திருவே கூறு

குளத்து நீர் என பொதுவாகச் சொன்னாலும் அதிலும் வேறுபாடுகள் இருப்பதாக கூறுகிறார். குளத்தில் வாழும் நீர்த் தாவரங்களைப் பொறுத்து அந்த குளத்து நீரின் குண இயல்புகள் மாறுபடுமாம். தாமரை அதிகமாக வளர்ந்திருக்கும் குளத்து நீரால் வாதம், பித்தம், வெக்கைநோய், தாகமும் உணடாகுமாம். அல்லி அதிகமாக வளர்ந்திருக்கும் குளத்து நீரால் அக்கினி, மந்தபேதி, சொறிசிரங்கு, வெப்பு, நாவிலச்சரம், தாதுநஷ்டமும் உண்டாகுமாம் இதனால் குளத்து நீரை அருந்துவதை தவிர்க்க வேண்டும். 
பொதுவில் குளத்து நீரை பருகி வந்தால் வாதம், மதுமோகம், குளிர்ச்சி ஆகியவற்றை அதிகம் உண்டாகும் என்கிறார். தேரையரின் தனித்துவமான இந்த தகவலின் பின்னாலிருக்கும் அறிவியல் ஆராயப் படுதல் அவசியம். 

ஏரிநீர்,சுனைநீர்

ஏரிநீர் வாதமிளைத்த துவர்ப்பாகுங்
கூரியதோர் கற்சுனைநீர் கூறுங்காற் - சிரியதோர்
வாதமொடு பித்தமெழும் வைத்தொருநாட்பின்னுண்ணிற்
சீதமில்லை யுட்டினமாஞ் செப்பு.

சுனைப்புனலைத் துய்த்தார்க்குஞ் சூழ்ந்ததிற்றோய்ந்தோர்க்குங்
களைப்புறுசீ தச்சுரமுங்காணும் - வினைக்குரிய
வாதமுறுகத் தால்வருமே நடுக்கலின்னும்
ஓதுபித்த கோபமுமா முன்னு.

ஏரி நீர் வாதத்தையும் துவர்ப்பையும் உண்டாக்குமாம். கற்கள் நிறைந்த சுனை நீரானது வாதத்தையும் பித்தத்தையும் உண்டாக்குமாம். ஆனால் அந்த சுனை நீரை ஒருநாள் வைத்திருந்து அருந்தினால் எந்த கெடுதலும் செய்யாது ஆனால் உடல் சூட்டை உண்டாக்கும் என்கிறார் தேரையர்.

ஓடைநீர்

ஓடை தருநீரை யுண்ணவதி தாகமுமா
மேடையெனத் தோட்பலனு மெத்தவா மோடைமலர்க்
கண்ணா யதுதுவர்ப்புங் காணாமதுரமுமாம்
எந்நாளும் பாரி லியம்பு.

ஓடை நீர் சுவையின் அடிப்படையில் இரண்டாக பிரித்து கூறப் படுகிறது. ஒன்று துவர்ப்புச் சுவையுடைய நீர், மற்றயது இனிப்புச் சுவையுடைய நீர். இந்த இருவகை நீரில் எதை அருந்தினாலும் தாகமும் பலமும் அதிக அளவில் ஏற்படும் என்கிறார் தேரையர்.
கிணற்று நீர்

ஆசாரக் கூபத் தறலா லதிதாகம்
வீசாகச் சூடுபசி மெய்க்காந்தன் - மாசூலை
மெய்யுள்வலி சந்துளைப்பு வீழ்மயக்கஞ் சோபைபித்தம்
பையவரும் மீளையறும் பார்.

கிணறு தோண்டப்படும் நில வளத்தை பொறுத்து கிணற்று நீரை இரு வகையாக பிரிக்கலாம் என்கிறார். ஒன்று உவர் நீர் கிணறுகள், மற்றயது நன்னீர் கிணறுகள். இதில் எந்த வகை நீரை அருந்தினாலும் தாகம், சூலை, சூடி போன்றவை நீங்கி உடலில் வலு உண்டாகுமாம். அத்துடன் சிலேத்துமம், வாதம், மயக்கம், சோபை, பித்தம் ஆகியவையும் நீங்கும் என்கிறார் தேரையர். 
அறிவியல் பெரிதாக வளர்ச்சியடையாத ஒரு காலகட்டத்தில் நமது முன்னோர்கள் நாம் அருந்தும் தண்ணீரிலும் இத்தனை தெளிவுகளை ஆய்ந்தறிந்து அவற்றை நூலாக்கி வைத்திருக்கின்றனர். இவற்றை பயன் படுத்தாமல் அல்லது மேம்படுத்தாமல் போனது நமது தவறே.... இனியாகிலும் இவற்றின் அருமை பெருமைகளை உணர்வதோடு ஆர்வமுள்ளவர்களுக்கு பகிர்வதன் மூலம் நமது முன்னோர்களின் பெருமையை உலகறியச் செய்திட உறுதியேற்க வேண்டுகிறேன்.

உணவு - மழைநீர், ஆலங்கட்டி நீர், பனிநீர், ஆற்றுநீர்.

உணவு - மழைநீர், ஆலங்கட்டி நீர், பனிநீர், ஆற்றுநீர்.


நமது முன்னோர்கள் தண்ணீரை மழைநீர், ஆலங்கட்டி நீர், பனிநீர், ஆற்றுநீர், குளத்துநீர், ஏரிநீர், சுனைநீர், ஓடைநீர், கிணற்று நீர், ஊற்றுநீர், பாறைநீர், அருவிநீர், அடவிநீர், வயல்நீர், நண்டுக்குழி நீர், உப்புநீர், சமுத்திரநீர், இளநீர் என பதினெட்டு வகைகளாய் பிரித்துக் கூறியதை நேற்றைய பதிவில் பார்த்தோம். 
இன்றைய பதிவில் முதல் நான்கு வகைகளான மழைநீர், ஆலங்கட்டி நீர், பனிநீர், ஆற்று நீர் பற்றிய தேரையரின் தெளிவுகளை பார்ப்போம். இந்த பதிவில் பகிரப்படும் தகவல்கள் யாவும் “பதார்த்த குண சிந்தாமணி” என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டவை.

மழைநீர்

சீதமுறுங் குளிர்ச்சி சேருமே சித்தத்துட
போதந் தெளிவாய்ப் பொருந்துங்கா ணாதமோடு
விந்தும் வளர்ந்துவரு மேதினியி லெவ்வுயிர்க்குஞ்
சிந்துமழை நீராற் றெளி.

மழை நீரை தேரையர் மிக உயர்வாகச் சொல்கிறார். இந்த மழை நிரினால்தான் உலகத்தில் உள்ள அத்தனை உயிரினங்களுக்கும் உயிர்ச்சத்து கிடைக்கிறது என்கிறார். இத்தகைய சிறப்பான மழை நீரை சேமித்து வடிகட்டி அருந்த வேண்டுமாம். இப்படி தொடர்ந்து அருந்தி வந்தால் உடல் உஷ்ணம் நீங்கி, அறிவு விருத்தியும் தெளிவும் உண்டாகும் என்கிறார்.

ஆலங்கட்டி நீர்

வெண்மாசி மேகமுடன் வீறும் பெரும்பாடு
கண்மாசிகாந்தல் கடிதகற்றுந் - தண்மீறும்
விற்கற் சுவாசமுடன் மெய்ம்மயக்க முன்போக்குங்
கக்குமா லாங்கட்டி காண்.

சில நேரங்களில் மழை பெய்யும் போது வானில் இருந்து பெரிய அளவிலான பனிக் கட்டிகள் விழுவதை பார்த்திருக்கலாம் இவையே ஆலங்கட்டிகள் என்று அழைக்கப்படும். இந்த ஆலங்கட்டி நீரை சேமித்துவைத்து அருந்துவதால் மேகம்,  பெரும்பாடு, கண்மாசி, காந்தல், விக்கல், சுவாச நோய்கள், மெய்மயக்கம் ஆகியவை நீங்கும் என்கிறார் தேரையர்.

பனிநீர்

பனிச்சலத்தை யெல்லுதயம் பாணஞ்செய் வாரைத்
தனிச்சொறிசி ரங்குகுட்டந் தாபந் - தொனிக்கயங்கால்
முத்தோஷி நீரிழிவு மூடழல்கி ராணியிவை
கொத்தோடு தாழ்ந்தகலுங் கூறு.

பனிநீர் என்பது அதிகாலை வேளையில் வெளியான இடதில் ஒரு பாத்திரத்தை வைப்பதன் மூலம் சேகரிக்கப்படும் நீர். இந்த நீரை சேகரித்த உடன் அருந்த வேண்டுமாம். காலம் தாழ்த்தி அருந்தக் கூடாதாம். இப்படி தொடர்ந்து காலையில் பனி நீரை அருந்தி வருவதால் சொறி, சிரங்கு, குஷ்டம், தாபம், சயம், வாய்வு, முத்தோஷம், நீரிழிவு, அழல் கிராணி ஆகிய நோய்கள் நீங்கும் என்கிறார்.
தற்போது நீரழிவு நோயினால் எல்லா வயதினரும் பாதிப்புக்கு உள்ளாகி வரும் இந்த வேளையில் தேரையரின் இந்த குறிப்பு மகத்தானது. இது தொடர்பாக மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டால் பல புதிய கூறுகள் புலப்படலாம்.
ஆற்றுநீர் 

ஆற்றுநீர் வாத மனலங் கபத்தோடு
தோற்றுகின்ற தாகந் தொலைக்குமே - ஊற்றமிகுந்
தேகத்தி னோயையெல்லாஞ் சீறித் துரத்திவிடும்
போகத்திற் றாதுவுமாம் போற்று.

ஒவ்வொரு ஆற்று நீருக்கும் தனித்துவமான ஒவ்வொரு குணம் இருப்பதாகவும், அவற்றை தொடர்ந்து பருகுவதாலும் அவற்றில் குளிப்பதாலும் உடலுக்கு குறிப்பிடத் தக்க நன்மைகள் கிடைக்கும் என்கிறார். எனினும் பொதுவில் ஆற்று நீரை பருகிவந்தால் வாதம், அனல், கபம், தாகம், எல்லா நோய்களும் தீருமாம். மேலும் தவிர தாது விருத்தியும் உண்டாகுமம் என்கிறார் தேரையர். 

உணவு - தண்ணீரும் அதன் வகைகளும்!

உணவு - தண்ணீரும் அதன் வகைகளும்!


பஞ்சபூதங்களில் ஒன்றான தண்ணீர் நமது உணவின் மிக முக்கியமான அம்சம். இத்தகைய தண்ணீரின் பங்களிப்பு நமது முன்னோர்களின் வாழ்வில் எத்தகைய இடத்தினை கொண்டிருந்தது என்பதை இன்று பார்ப்போம். நமது உடலின் 65 விழுக்காடு நீர் மற்றும் நீர்மங்களினால் ஆனது என்கிறது நவீன அறிவியல். நாம் சாதாரணமாய் நினைக்கும் தண்ணீர் இல்லாத வாழ்க்கையை ஒரு நொடிகூட கற்பனை கூட செய்யமுடியாது. அந்த அளவிற்கு நீர் நமது வாழ்வின் இன்றியமையாத பொருள்.
நம் உடலில் பித்த நீர், கணைய நீர், இரைப்பை நீர், உமிழ் நீர், வியர்வை நீர், இரத்தத்தின் ஊடகமான நீர், சிறு நீர், கண்ணீர், காதுத் திரவம் எனப் பலவகையான நீர்மங்கள் உள்ளன. நாம் அருந்தும் குடிநீர்தான் இத்தகைய நீர்மங்களாய் மாறி உடலை இயக்குகிறது. தண்ணீர் இல்லாமல் சமைக்கப்படும் உணவினை குடல் ஏற்பதில்லை. 
தண்ணீரானது எதனுடனும் சேர்ந்து வினையாற்றும் தன்மையுடையது. பஞ்ச பூதஙக்ளின் மற்ற நான்கு கூறுகளுடன் தண்ணீர் சேரும்போது தன் ஆற்றலை வெளியிடுகிறது. ஒரு உதாரணம் சொல்வதானால், கறையானின் உமிழ்நீர் மண்கலவையோடு சேர்ந்த நிலையில் அசைக்கவும் இலகுவில் கரைக்கவும் முடியாத பெரிய புற்றுகளாக உருவெடுக்கின்றது. 
இந்தப் புற்று மண், நீரும் நிலமும் ஆகிய இரண்டு பூதங்களின் சக்தி வாய்ந்த கலவை. இந்தப் புற்று மண்ணைக் கொண்டு வந்து நீரில் கரைத்து உடம்பில் வீக்கமுள்ள இடங்களில் பூச வீக்கம் நீங்கும், இரத்தக் கட்டு விலகும். உடம்பில், முகத்தில் தடவிக் குளிக்க உடம்பில் உள்ள தேமல், படை நீங்கும் என்கின்றனர் சித்தர் பெருமக்கள். 
நம் உணவிலேயே சத்து மிகுந்தது நீராகாரம். நாம் கடைகளில் வாங்கிக் குடிக்கும் குளிர்பானங்களை விடப் பல மடங்கு சத்துடையது இந்தப் பழஞ்சோற்றுநீர். அதனோடு நாம் துணையாகக் கொள்ளும் வெங்காயமும் ஒரு நீர் செறிந்த பொருளே. வயது ஏற ஏறத் திடப்பொருளைக் குறைத்துத் திரவப் பொருளை அருந்தினால் ஆயுள் அதிகரிக்கும் என்கிறார்கள் சித்தர்கள்.
தண்ணீரின் மருந்துப் பயனைக் கூட்ட வேண்டுமானால் அதனைத் தாமிரப் பாத்திரத்தில் சேகரித்து வைத்திருந்து அருந்த வேண்டும். இப்படி தண்ணீரின் மகத்துவத்தை சொல்லிக் கொண்டே போகலாம்.
நிலத்தின் மேற்பரப்பில் கிடைக்கும் தண்ணீர், நிலத்தின் கீழே கிடைக்கும் தண்ணீர் என இரண்டு வகையாகவே நாம் நீரின் வகையைஅறிந்திருக்கிறோம். ஆனால் நமது முன்னோர்கள் தண்ணீரை அதன் குண இயல்புகளின் அடிப்படையில் பதினெட்டு வகையாக பிரித்துக் கூறியிருக்கின்றனர்.
அவை முறையே....

1 - மழைநீர்
2 - ஆலங்கட்டி நீர்
3 - பனிநீர்
4 - ஆற்றுநீர்
5 - குளத்துநீர்
6 - ஏரிநீர்
7 - சுனைநீர்
8 - ஓடைநீர்
9 - கிணற்று நீர்
10 - ஊற்றுநீர்
11 - பாறைநீர்
12 - அருவிநீர்
13 - அடவிநீர்
14 - வயல்நீர்
15 - நண்டுக்குழி நீர்
16 - உப்புநீர்
17 - சமுத்திரநீர்
18 - இளநீர்

உணவு - எத்தனை சாப்பாடு?, எப்போது சாப்பிடுவது?

உணவு - எத்தனை சாப்பாடு?, எப்போது சாப்பிடுவது?


பழந்தமிழரும், உணவும் என்கிற இந்த நெடுந்தொடரில் இதுவரையில் உணவின் வரலாறு, தன்மை, சுவை, குணநலன்கள் அவை மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் போன்றவைகளைப் பார்த்தோம். உணவை எப்படி உட்கொள்வது, எந்த சமயத்தில் உட்கொள்வது, எந்த வகையான உணவுகளை உட்கொள்வது, உணவையே மருந்தாகவும், மருந்தையே உணவாகவும் கொள்ளுதல் என பல பரிமாணங்களை சித்தர் பெருமக்கள் அருளியிருக்கின்றனர்.

அன்னிய மொழி மற்றும் இனத்தாரின் பாதிப்புகள் நமது வாழ்வில் ஊடுறுவும் வரையில் இந்த வாழ்வியல் நியதிகளை நமது முன்னோர்கள் தீவிரமாய் கடைபிடித்தே வந்தனர். 
தற்போதைய உலகமயமாக்கல் கலாச்சாரத்தில் நமது வேர்களை நாம் மறந்து போய்விட்டோம் என்பது வருந்தத்தக்கது. அந்த வகையில் மறைந்து போன சில நியதிகளை இனிவரும் நாட்களில் பகிர்ந்து கொள்கிறேன். அந்த வகையில் ஒரு நாளைக்கு எத்தனை தடவை உணவை உட்கொள்ளுதல் வேண்டும், எந்த சமயத்தில் உட்கொள்ள வேண்டும் என்கிற தகவலை இன்று பார்ப்போம்.
ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு போதுமானது என்கிறார் தேரையர். தனது "பதார்த்த குண சிந்தாமணி" என்னும் நூலில் இதனை பின் வருமாறு விளக்குகிறார்.

தன்மமி ரண்டேயூண் டப்பிமுக்காற் கொள்ளினினன்
சின்மதலை காளைகடல் சேர்பருவ-தன்மூகுர்த்த
மொன்றுக்கு ணானகுக்கு ளோதுமிரண் டுக்குளுண்பர்
நன்றுக்குத் தீயோர் நயந்து

ஒரு நாளில் இரண்டு வேளைகள் உண்பதே நன்மையளிக்கும். அதற்குமேல் மூன்றாவது காலம் உணவு உண்ன வேண்டும் என்று விரும்புகிறவர்கள் நாளின் முதலாவது உணவை சூரிய உதய நேரத்திலிருந்து சரியாக ஒன்றரை மணி நேரத்திற்குள்ளும், இரண்டாவது உணவை சூரிய உதயத்தில் இருந்து ஆறு மணி நேரத்திற்குள்ளும், மூன்றாவது உணவை சூரியன் மறைந்து மூன்று மணி நேரத்திற்குள்ள்ம் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். இந்த கால முறை தவறி உண்டால் உடலுக்கு தீமை உண்டாகும் என்கிறார்.

என்ன தீமை விளையும்?

மூன்றுநான் காறெண்மு கூர்த்தங் களின்முறையே
ஞான்றுளுண்ணு மந்த நறுமுணவே-தோன்றுடலுக்
கொக்குமித நோயரமு ரோகமுயிர்க் கந்தரஞ்செய்
விக்குமித மாராய்ந்து விள்.

சூரியன் உதய நேரத்திலிருந்து நான்கு மணி நேரதில் உண்ணும் உணவினால் உடலுக்கு மிதமான நோய் ஏற்படுமாம். சூரியன் உதய நேரத்திலிருந்து ஆறு மணி நேரத்துக்கு மேல் உண்ணும் உணவினால் நோய்கள் உண்டாகுமாம்,  மாலையில் சூரியன் மறைந்து மூன்று மணி நேரத்திற்கு மேல் உண்ணும் உணவினால் உயிருக்கு தீங்கு விளையும் என்கிறார்.
தேரையரின் இந்த தெளிவுகளுக்கு பின்னே இருக்கும் அறிவியல் தன்மைகள் ஆய்வுக்குறியவை. எனினும் நமது முன்னோர்கள் இதனை கடைபிடித்து நோயற்ற வாழ்வு வாழ்ந்திருந்தனர் என்பது மட்டும் உண்மை.

உணவும், வகையும் - தாமச உணவு!

உணவும், வகையும் - தாமச உணவு!


ஒருவர் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளே அவரின் குண நலன்களை தீர்மானிக்கிறது என்ற நமது முன்னோர்களின் தெளிவுகளை பார்த்து வருகிறோம். மூன்று வகையான உணவுகள் மூன்று விதமான குண நலன்களுக்கு காரணமாய் இருக்கிறது என்பதையும், முதல் இரண்டு வகை உணவுகள் பற்றி இதுவரை பார்த்திருக்கிறோம்.அந்த வகையில் இன்று தாமச குணத்தை தரும் உணவு வகை பற்றி பார்ப்போம்.
முதலில் தாமச குணம் என்றால் என்ன?, அது எத்தகையது என்பதை பார்த்துவிடுவோம்.
மிதமிஞ்சிய கோபம், அளவு கடந்த காமம், அதிக தூக்கம், மூர்க்கமான முட்டாள்தனம், நிலைத்த மனமின்மை போன்றவற்றையே தாமச குணம் என்கிறார்கள்.
இத்தகைய குண நலன்களை உடையவர்கள் முரடர்களாகவும், எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் முன்கோபிகளாகவும், சிந்தித்து சீர்தூக்கிப் பார்க்கும் திறமின்றி சூழ்நிலை மற்றும் உணர்வுகளுக்கு அடிமையாகி குற்றங்களைச் செய்பவர்களாக இருப்பார்களாம்.
இப்படியான குணத்தை ஒருவருக்கு, அவர் உட்கொள்ளும் உணவுகள்தான் கொண்டு தருகின்றன என்பதை தற்போதை நவீன அறிவியலும் ஆய்வுகளுக்குப் பின்னர் ஒப்புக் கொண்டிருப்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இம் மூன்று வகை உணவுகளின் பட்டியலைக் கொண்டு, இதுநாள் வரை நாம் எத்தகைய உணவுகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம், நமது குணநலன்கள் எத்தகையதாக இருக்கிறது என்பதை சுய பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் நம்மை மேம்படுத்திக் கொள்ளலாம்.


தாமச குணத்தை தரும் உணவுப் பொருட்கள்..

1. வெங்காயம்
2. வெள்ளைப் பூண்டு
3. முருங்கைக் கீரை
4. பசலைக் கீரை
5. கலவைக் கீரை
6. ஆரைக் கீரை
7. சிறு கீரை
8. உருளைக் கிழங்கு
9. பெருவல்லிக் கிழங்கு
10. முள்ளங்கி
11. சிறுவள்ளிக் கிழங்கு
12. மரவள்ளிக் கிழங்கு
13. முருங்கைக் காய்
14. பீர்க்கை
15. வாளவரைக்காய்
16. மொச்சை
17. சுரைக்காய்
18. அவரை
19. கொள்
20. செஞ்சோளம்
21. கருஞ்சோளம்
22. பட்டாணி
23. தட்டைப்பயறு
24. கம்பு
25. வரகு
26. கேழ்வரகு
27. புழுங்கல் அரிசி
28. கத்திரிக்காய்
29. முருங்கைப்பூ
30. ஈச்ச வெள்ளம்
31. பனைவெல்லம்
32. பனங்கற்கண்டு
33. கள் வகைகள்
34. நுங்கு
35. விளக்கெண்ணெய்
36. பருப்புக் கீரை
37. புளிச்சக்கீரை
38. காசினிக்கீரை
39. பனம்பழம்
40. சீதாப்பழம்
41. பண்ணைக் கீரை
42. முந்திரிப்பழம்
43. எருமைப்பால்
44. எருமை தயிர்
45. எருமை வெண்ணெய்
46. எருமை நெய்


இது வரை பழந் தமிழரின் வாழ்வில் உணவு என்பது எத்தகையதாக இருந்தது. உணவின் வகைப்பாடுகள்,அதனால் ஏற்பட்ட வாழ்வியல் கூறுகள் போன்றவற்றைப் பார்த்தோம். 

உணவும், வகையும் - ரஜோ உணவு!

உணவும், வகையும் - ரஜோ உணவு!


நம் முன்னோர்கள் உணவினை குண நலன்களின் அடிப்படையில் மூன்று வகையாக பிரித்துக் கூறியிருப்பதையும், அதில் முதல் வகையான சாத்வீக உணவு பற்றியும் முந்தைய பதிவுகளின் ஊடே பார்த்தோம். அந்த வகையில் இன்று இரண்டாவது வகையான ராஜோ உணவு பற்றி பார்ப்போம்.
சுறுசுறுப்பு, விறுவிறுப்பு, உடல் வலிமை, தான் என்ற திணவு, அதீதமான துணிச்சல், வீரம், காமம், பேராசை, கோபம், மனவெழுச்சிகளின் திடீர் வெளிப்பாடு, மன மாறுதல்களின் திடீர்த் தோற்றம், எதையாவது சாதிக்க வேண்டும் என்ற துடிதுடிப்பு, பரபரப்பு, எதையும் முடித்தே தீருவோம் என்ற வேகம் போன்ற குண இயல்புகள் ரஜோ வகை உணவுகளைத் தொடர்ந்து உண்டு வருவதால் ஏற்படுமாம். 
மேலும், இந்த உலகில் சாதிக்கத் துடிக்கும், வாழத் துடிக்கும், வெற்றி முரசு கொட்டத் துடிக்கும் மனிதர்கள், சமூகங்கள் எல்லாம், இக்குணத்தைப் பெற்றவர்களாக இருப்பார்களாம்.
இவை எல்லாம் சரி தான்.!, எவையெல்லாம் ரஜோ உணவுகள்?, 
நமது முன்னோர்கள் அவற்றையும் தெளிவாக வரையறுத்துக் கூறியிருக்கின்றனர்.


ரஜோ குணப் பொருள்கள்..

1. பச்சை மிளகாய்
2. ஊசி மிளகாய்
3. எலுமிச்சங்காய்
4. எலுமிச்சம்பழம்
5. புளியங்காய்
6. அத்திக்காய்
7. ஆவாரம்பூ
8. வாழைப்பூ
9. அறுகீரை
10. பறங்கி இலை
11. புதீனா
12. பார வெற்றிலை
13. மாகாளிக் கிழங்கு
14. காரக் கருணைக் கிழங்கு
15. கொட்டிக் கிழங்கு
16. கருணைக் கிழங்கு
17. தாமரைக் கிழங்கு
18. சிறு கிழங்கு
19. களிப்பாக்கு
20. கடுகு எண்ணெய்
21. வெள்ளாட்டுப்பால்
22. வெள்ளாட்டுத் தயிர்
23. வெள்ளாட்டு எண்ணெய்
24. வெள்ளாட்டு நெய்
25. ஓமம்
26. கசகசா
27. கலப்பு நெய்
28. கல்யாணப் பூசணிக்காய்
29. கோடைப் பூசணி
30. பன்றிப் புடலங்காய்
31. வெண்டைக்காய்
32. புடலங்காய்
33. கருஞ்சீரகம்
34. காட்டு சீரகம்
35. பிறப்பு சீரகம்
36. லவங்கம்
37. லவங்கப்பட்டை
38. அப்பளாக் காரம்
39. வீட்டு உப்பு
40. புளி
41. மிளகாய்
42. நாய்க்கடுகு
43. செங்கடுகு
44. சிறு கடுகு
45. வெண்கடுகு
46. தனியா
47. கஸ்தூரி மஞ்சள்
48. கஸ்தூரி
49. மஞ்சள்
50. முந்திரிப்பருப்பு
51. மணிலா
52. ஜவ்வரசி
53. துவரம்பருப்பு
54. அன்னாசி
55. மாதுளை
56. கொமட்டி மாதுளை
57. நாக்கில் பட்டால் விறுவிறுவென்று எரிச்சல் தரும் பொருள்கள் எல்லாம் இவ்வகையில் சேரும்.

இப்பொருள்கள் எல்லாம் விறுவிறு, சுறுசுறு குணம் கொண்டவை. உலக வாழ்வில் உள்ளவர்களை, உணர்ச்சிகளத் தூண்டி ஆட்டிப்படைக்கும் குணம் கொண்டவை இவை.

உணவும், வகையும் - சாத்வீக உணவு!

உணவும், வகையும் - சாத்வீக உணவு!


மனிதன் உயிர்வாழ உணவு அவசியம். நாம் உட்கொள்ளும் உணவே நமது குணநலன்களை தீர்மானிக்கிறது. இந்த குணநலன்களே நம்முடைய எண்ணம், செயல், சிந்தனைகளை தீர்மானிக்கிறது. இவை எல்லாம் சேர்ந்தே ஒரு சமூகத்தின் வாழ்வியலையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கிறது. 
நம் முன்னோர்கள் குண நலன்களின் அடிப்படையில் உணவை மூன்றாக பிரித்துக் கூறியிருக்கின்றனர் என்பதை முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அந்த வகையில் இன்று முதலாவது பிரிவான சாத்வீக உணவு பற்றி பார்ப்போம்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்கிற பழமொழி நாமனைவரும் அறிந்ததே!
உணவின் தரம், சுவை, அளவு எல்லாம் மிதமான அளவில் அமைந்திருந்தால் அதனை சாத்வீகமான உணவு எனலாம். இத்தகைய உணவுகளே மனிதத் தன்மைகள் எனப்படும் அருங் குணங்களான அமைதி, அகிம்சை, வாய்மை, தவம், பக்தி, கருணை, மன்னிக்கும் பெருங்குணம், திருப்தி, கண்ணியம், திருடாமை, புறங்கூறாமை, நிதானம், எப்போதும் மகிழ்ச்சி போன்றவற்றை ஒருவருக்குள் வளர்த்தெடுக்கிறது என்கின்றனர். சாத்வீக உணவுகளை தொடர்ந்து உண்டு வந்தால்  குண நலன்கள் இயல்பாக வாய்க்குமாம்.
சித்தர்கள், யோகிகள், துறவிகள், ஆத்ம சாதகர்கள் போன்றவர்கள் இத்தகைய உணவினையே நாம் உண்ண வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
சரி, எவையெல்லாம் சாத்வீக உணவுகள், நமது முன்னோர்கள் அவற்றையும் தெளிவாக வரையறுத்துக் கூறியிருக்கின்றனர்.

விலங்கில் இருந்து பெறப்படும் உணவு..

1. சுத்தமான பசும்பால்
2. சுத்தமான பசுந்தயிர்
3. பசு வெண்ணெய்
4. பசுவின் நெய்

எண்ணை வகைகள்..

5. நல்லெண்ணெய் (எள் எண்ணெய்)
6. இலுப்பை எண்ணெய்
7. தேங்காய் எண்ணெய்
8. சுத்தமான தேன்

பயிர் வகைகள்..

9. பேரீச்சங்காய்
10. பேரீச்சம்பழம்
11. பாதாம் பருப்பு
12. கொப்பரை
13. பச்சைக் கற்பூரம்
14. குங்கமப் பூ (சுத்தமானது)
15. ஜாதிக்காய்
16. ஜாதிப் பத்திரி
17. திராட்சை
18. ஏலரிசி
19. கற்கண்டு
20. வெல்லச் சர்க்கரை
21. வெல்லம்
22. சுக்கு
23. மிளகு
24. திப்பிலி
25. வெந்தயம்
26. எள்
27. உளுந்து
28. அவல்
29. பொரி
30. பச்சைப் பயறு
31. திணை
32. இஞ்சி
33. வால் மிளகு
34. வெள்ளை மிளகு
35. ஜீரகம்
36. கோதுமை
37. வாற்கோதுமை
38. பச்சை அரிசி
39. சீரகச் சம்பா
40. மிளகுச் சம்பா
41. கார் அரிசி
42. குன்றிமணிச் சம்பா

காய்கறிகள், கனிகள்..

1. வாழைப்பழம் (வாழைப்பழங்களில் பூவன் பழம் மட்டுமே அதிகம் உகந்ததாக குறிப்பிடப்படுகிறது)
2. மொந்தன் வாழைப்பழம்
3. பச்சை நாடன் வாழைப்பழம்
4. பேயன் வாழைப்பழம்
5. ரஸ்தாளி
6. செவ்வாழை
7. வெண் வாழை
8. மலைவாழை
9. நவரை வாழைப்பழம்
10. அடுக்கு வாழைப்பழம்
11. கருவாழைப்பழம்
12. கற்பூர வல்லி
13. இளநீர்
14. பன்னீர்
15. தாளம் நீர்
16. மல்லிகை நீர்
17. மாம்பழம் (மிகச் சத்துக் கொண்டது)
18. கொய்யாப்பழம்
19. ஜாதி நார்த்தைப் பழம்
20. கொழிஞ்சி நார்த்தைப் பழம்
21. கிச்சிலிப் பழம்
22. நார்த்தம் பழம்
23. நாவல் பழம்
24. பலாப்பழம்
25. முலைக்கீரை
26. மணத்தக்காளி
27. பொன்னாம் கண்ணிக் கீரை
28. கொத்தமல்லிக் கீரை
29. வெந்தயக்கீரை
30. சக்ரவர்த்திக் கீரை
31. அகத்திக்கீரை
32. அகத்திப்பூ
33. வேப்பம்பூ
34. பசு முன்னை
35. பொன் முசுட்டை
36. முசுட்டை
37. கருவேப்பிலை
38. தூதுளை இலை
39. வஜ்ரவல்லி (பிரண்டை)
40. கீரைத் தண்டு
41. வாழைத்தண்டு
42. செங்கீரைத்தண்டு
43. வெண்கீரைத் தண்டு
44. சேப்பந்தண்டு
45. சேப்பங்கிழங்கு
46. தாமரைக் கிழங்கு
47. சர்க்கரைவள்ளிக் கிழங்கு
48. தேங்காய்
49. அருநெல்லிக்காய்
50. நெல்லிக்காய்
51. சுண்டைக்காய்
52. சுக்கங்காய்
53. மாங்காய்
54. கரைக்காய்
55. இலந்தைக்காய் - பழம்
56. வெள்ளரிக்காய்
57. கொம்பு பாகல்
58. மிதி பாகல்
59. பலாக்காய்
60. ம்முள்ளுக் கத்தரிக்காய்
61. விளாம்பழம்
62. நார்த்தங்காய்
63. கடார நார்த்தை காய்
64. கொழிஞ்சி நார்த்தங்காய்
65. மணத்தக்காளிக் காய்
66. மலைச் சுண்டைக்காய்

இவை எல்லாம் சாத்வீக உணவுகளாகும். இந்த உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் மேலே சொன்ன பண்புகள் தழைத்தோங்கும்.

உணவு - சுவையும் அதன் குணமும்!

உணவு - சுவையும் அதன் குணமும்!


உணவை சமைத்து உண்ண துவங்கிய பின்னரே சுவையின் முக்கியத்துவம் முன்னிறுத்தப் பட்டது. நமது முன்னோர்கள் உப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு, இனிப்பு என ஆறு வகையான சுவைகளை வரையறுத்திருக்கின்றனர். இன்றும் கூட அறுசுவை உணவு என்கிற பதம் நம் புழக்கத்தில் இருந்து வருகிறது. முழுமையான சரிவிகித உணவை அறுசுவை உணவு என்பதாகவும் வலியுறுத்தினர். இன்று நம்முடைய அன்றாட உணவில் இந்த ஆறு சுவைகளும் இருக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். 
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்கிற பழமொழி, சுவையின் மகத்துவத்தை நமக்கு உணர்த்துவதாகவே கருதலாம். நமது உணவில் இந்த சுவைகள் சரியான விகிதங்களில் இல்லாமலோ அல்லது ஏதேனும் ஒரு சுவை மட்டும் அதிகரிக்கும் பட்சத்தில் அது உடலில் நச்சுத்தன்மையை உருவாக்கும். குறிப்பிட்ட சுவையை முற்றிலுமாய் தவிர்த்தால் அது உடலில் குறைபாடுகளை உண்டாக்குமாம். எனவே எல்லா சுவையும் நமது உணவில் சரியான விகிதத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.
இந்த சுவைகளை எப்படி சுவைப்பது?
நமது முன்னோர்கள் உணவினை சுவைக்கும் வழிமுறைகளை தெளிவாகவே சொல்லியிருக்கின்றனர். அவற்றை இந்த தொடரின் நெடுகில் பகிர்ந்து கொள்கிறேன்.
இனி இந்த சுவைகள் நமது வாழ்வில் என்னவெல்லாம் செய்கிறதென பார்ப்போம். 
சுவைகளின் விகிதங்களைப் பொறுத்து உணவை மூன்று பிரிவாக, மூன்று குணமுடைய உணவுகளாக வகைப் படுத்தி இருக்கின்றனர். அவை.. “சாத்வீக உணவு”, “ராஜோ உணவு”, “தாமச உணவு”  என்பதாகும்.
இந்த மூன்று வகை உணவுகளின் அடிப்படையில் மனிதர்களின் குண நலன்கள் மாறு படுகின்றன. சாத்வீக வகை உணவுகள் அமைதியான குணநலனையும், ராஜோ வகை உணவுகள் ஆர்ப்பரிப்பான குண நலனையும், தாமச வகை உணவுகள் அழிவினை உண்டாக்கும் குண நலனையும் நல்குமாம். பஞ்சபூதக் கலவையான நமது உடலின் ஐம்புலன்களின் செயல்பாட்டினை நெறிப்படுத்தும் உணவுதான் நமது குண நலன்களையும் தீர்மானிக்கின்றன என்றால் ஆச்சர்யம்தானே!

உணவு - பழந்தமிழர்களும் சைவ உணவும்.

உணவு - பழந்தமிழர்களும் சைவ உணவும்.


தமிழர்கள் எங்கே வாழ்ந்தார்கள் என ஆராய்வதை விடவும், அவர்கள் ஐந்து வகையான நில அமைப்பில் பரந்து வாழ்ந்திருந்தனர் என கொள்ளலாம். ஆதியில் வேட்டை சமூகமாய் புலால் உண்பவர்களாய் இருந்தாலும், காலப் போக்கில் சமவெளி மற்றும் ஆற்றங்கரை நாகரீகமாய் தலையெடுத்த பின்னர் காய், கனி மற்றும் கிழங்குகளை தங்கள் உணவில் இணைத்துக் கொண்டதற்கான குறிப்புகளை காண முடிகிறது.
மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தில் மூங்கிலரிசி, தினை, தேன், காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தில் சாமை, வரகு, வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தில் செந்நெல், வெண்நெல், கடலும் கடல் சார்ந்த பகுதியில் மீனும் முக்கியமான உணவாக இருந்திருக்கின்றன. இந்த தகவல்ளை நாம் தொல்காப்பியத்தின் வழியே அறிய முடிகிறது.
இவை தவிர கால்நடைகளில் இருந்து கிடைத்த பாலில் இருந்து வெண்கட்டி, ஏடு, தயிர், மோர், நெய், ஆகியவற்றை தயாரித்து பயன் படுத்தியதற்கான குறிப்புகளும் உள்ளன.
உணவை சமைக்க ஆரம்பித்த காலத்தில் தமிழர்களின் உணவு அவித்தல், வேகவைத்தல், வறுத்தல் என்பதாகவே இருந்தது. பிற்காலத்தில் நெய் சேர்த்து பொரித்ததாக குறிப்புகள் கூறுகிறது. இறைச்சியில் நெய் சேர்த்து மிளகு தூவி பொறித்து உண்டதாக ஒரு பாடல் கூறுகிறது.
முதன்மையான உணவாக அரிசியே இருந்திருக்கிறது. நெல்லை வேக வைத்து புழுங்கல் அரிசியாக பயன்படுத்தியதாகவும் தெரிகிறது. தொன்று தொட்டு பயிரிட்டு வந்த பாரம்பரிய நெல் வகைகள் பலவும் இன்று முற்றாக அழிந்து விட்டதை இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். சோறுடன், குழம்பு, கூட்டு, பொறியல் என உணவை பல ருசிகளில் சமைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது.
உணவை இலையில் வைத்து உண்ணும் பழக்கம் ஆதியில் இருந்து இன்று வரை தொடர்வது தமிழர்களின் தனிச் சிறப்பு. தாமரை இலை, மந்தாரை இலை, வாழை இலை என பல்வேறு இலைகளை இதற்குப் பயன் படுத்தியிருக்கின்றனர். உண்வை எல்லோரும் கூடியிருந்து உண்ணும் வழக்கமும் இருந்திருக்கிறது. இதனை "சிறுஞ்சோற்று நிலை”, “பெருஞ்சோற்று நிலை” என குறிப்பிட்டிருக்கின்றனர். 
இவை தவிர கள் போன்ற மது வகைகளும் பழந்தமிழரின் வாழ்வில் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் தமிழகத்தில் பக்தி இயக்கம் எழுச்சி பெற்ற போதுதான் பிற இனக் குழுக்களின் உணவுக் கலாச்சாரம் தமிழர்களிடையே ஊடுருவி இருக்கிறது.

உணவு - நிறைவுப் பகுதி!

உணவு - நிறைவுப் பகுதி!


தண்ணீர் உணவின் இன்றியமையாத ஒரு பகுதி என்பதை உணர்ந்தே நம் முன்னோர்கள் தண்ணீரின் அடிப்படையை இத்தனை நுட்பமாய் பகுத்து தெளிவு கூறியிருக்கின்றனர். நாம் இது வரையில் தண்ணீரின் வகைகளை மட்டுமே பார்த்து வருகிறோம். 
இந்த தண்ணீர் நமது உடலின் செயல்பாட்டில் எத்தகைய பங்கு வகிக்கிறது என்பதை கீழே உள்ள படத்தின் மூலம் அறியலாம். இந்த படம் இணையத்தில் கிடைத்தது ஒன்று. இதை உருவாக்கியவர் பற்றிய தகவல்கள் தெரியவில்லை, அவசியம் கருதி அவரது அனுமதியின்றி இங்கே பகிர்கிறேன்.
இன்று தண்ணீரின் கடைசி மூன்று வகைகளைப் பற்றி பார்ப்போம்.

உப்புநீர்

உப்புநீரா னுலவை யுள்ளிலோ டிக்குத்தும்
எய்ப்பசன மாம்பித்த மேறிடுங்காண் - செப்புகின்ற
வாயிலூ றுஞ்சலமு மாதுவர்ப்பா மாதரசே
யோயுங் குடல்வாத மோது.

உப்பு நீரை அருந்துவதால் குடல்வாதம் நீங்குவதுடன், வாயுருத்தல், சாதஞ்செரிப்பு, பித்தம், வாய்நீருறல், துவர்ப்பு ஆகியவை உண்டாகும் என்கிறார்.

சமுத்திரநீர்

கடலின் புனலாற் கவிகை பெருநோய்
உடலின் கடுப்புதிரச் சூலை - படர்குஷ்டம்
வாதகுன்மம் வெப்பிரத்த வாதநீ ராமைம
கோதரம்பலீ கமறுங்கூறு

குன்ம வாயு குடற்கரி யென்பதும்
வன்ம மான மலசல பந்தமுங்
கன்மமாகும் வன்னோய்களுங் காணுமோ
நுன்மை வாரிநீர் காய்ச்சி நுகரினே

கடல் நீரைக் காய்ச்சிக் குடித்தால் தொழு நோய்(பெருநோய்), மகோதரம், உடல்கடுப்பு, உதிரச்சூலை, குஷ்டம், வாத குன்மம், வெப்பம், இரத்தவாதம், மகோதரக்கட்டி, பீலிகம், குன்மவாயு, மலசலபந்தம், வாதநீராமை கன்மத்தாலாகிய நோய்கள், சோணிதவாதம், நடுக்கு வாதம், நாக்கிழுப்பு, பல்லிடுக்கு ரத்தம், ஊனிற்றுவிழல், சந்நிதோஷம் ஆகியவை நீங்கும் என்கிறார். 

இளநீர்

இளநீரால் வாதபித்த மேருமனதுந்
தெளிவாய்த் துவங்குமிருதிஷ்டக் - கொளிவுங்
குளிர்ச்சியு முண்டாகுங் கொடியவனல் நீங்குத்
தளிர்ந்தகன நொய்தாகுஞ் சாற்று

இளநீரை அருந்துவதால் வாதம், பித்தம், அனல், கபம், வாந்தி, பேதி நீரடைப்பும் நீங்குமாம். அத்துடன் மனது தெளிவு, கண்ணொளி தேகக் குளிர்ச்சியும் உண்டாகும் என்கிறார் தேரையர். 
இதுவரை தேரையர் பகுத்துக் கூறிய பதினெட்டு வகையான தண்ணீரின் குண இயல்புகளைப் பார்த்தோம். இந்த நிலையைத் தாண்டி இந்த தண்ணீரை உணவாக, மருந்தாக கொள்ளும் பல முறைகளை சித்தர் பெருமக்கள் நமக்கு அருளிச் சென்றிருக்கின்றனர். எனினும் இந்த தொடரின் நீளம் மற்றும் சுவாரசியம் கருதி ஒரு இடைவெளிக்கு பின்னர் பிரிதொரு சமயத்தில் இந்த தொடரினை தொடர்கிறேன்.

கண்ணில் பூ விழுதல்..

கண்ணில் பூ விழுதல்..


நமது கண்ணின் கருவிழியில் வெண்படலம் ஏற்படுவதையே கண்ணில் பூ விழுந்துள்ளது எனக் கூறுவர். பல்வேறு காரணங்களினால் நமது விழித்திரையில் ஒளி ஊடுறும் தன்மை குறைவதே இதற்குக் காரணம். இதைத்தான் ஆங்கிலத்தில் கேட்ராக்ட் (cataract) என்று கூறுவர். நோய், கண்ணில் அடிபடுதல், பரம்பரைக் கூறு மற்றும் வயதின் காரணமாகவும், தொடர்ந்து வெளிச்சத்தையே பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்த குறைபாடு உண்டாகும். 
இதனால் விழித்திரையில் கொஞ்சம் கொஞ்சமாய் ஒளி ஊடுறுவும் தன்மை குறைந்து ஒரு கட்டத்தில் முழுமையான பார்வை இழப்பு ஏற்பட்டுவிடும். இதற்கு நவீன அறிவியலில் அறுவை சிகிச்சை மூலமாக புதிய செயற்கை கண் வில்லையை வைப்பதுதான் தீர்வாகக் கூறப் படுகிறது. தமிழில் இதனை கண்ணில் பூ விழுதல், விழிப்புரை , கண்புரை , கண்திமிரம் என்றும் அழைப்பர். 
இந்த குறைபாடு பெரும்பாலும் புரதத்தன்மை இழப்பால் ஏற்படுகிறது. கண்ணில் பூ விழுந்தால் தலைவலியோ கண் சிவப்பாக மாறுவதோ இருக்காது. சிலருக்கு அடிக்கடி கண்களில் நீர் வரலாம். பார்வையின் அளவு மிகவும் குறைந்து காணப்படும்.சூரிய ஒளி நேராக கண்களை தாக்குவதும், கண்களுக்கு அதிக வெப்பம் தரக்கூடிய வேலையைச் செய்பவர்களுக்கும் கண்ணில் பூ விழ அதிக வாய்ப்புக்கள் உள்ளன. 
நவீன மருத்துவத்தில் இந்தக் கண்ணில் பூ விழுவதை குணமாக்க மருந்து கிடையாது என்பது தான் உண்மை. நேரடியாக அறுவைச் சிகிச்சையின் மூலம் பாதிக்கப் பட்ட விழித்திரையை நீக்கிவிட்டு அந்த இடத்தில் செயற்கை விழித்திரையை பொறுத்துவதன் மூலம் மீண்டும் பார்வையைப் பெறமுடியும். எனினும் நமது முன்னோர்கள் இதற்கான தீர்வு ஒன்றினை அருளியிருக்கின்றனர் என்பது ஆச்சர்யமான ஒன்று. 
தேரையர் தனது நூலான "தேரையர் வைத்திய சாரம்" என்னும் நூலில் கண்ணில் பூ விழுதலை நிவர்த்திக்கும் முறை ஒன்றினை அருளியிருக்கிறார்.

பாரடா நற்தேனில் சங்கா லாட்டி
     பருங்குன்றி மணியது சோலிரண்டு போதும்
நேரடா மண்டலந்தான் விழியிற் போடு
     நில்லரிது நில்லரிது பூவிட்டோடும்
மாரடா திரோதாயி மாய்கை தள்ளு
    மகத்தான என்குருவின் முறை தப்பாது
சேரடா இளவென்னீர் சாதங் கொள்ளு
     சேராதே புளிப்புகையுந் தள்ளிப் போடே

சுத்தமான தேனில், சங்கு கொண்டு உரைத்து ஒரு குன்றியளவு தினம் இரண்டு வேளையாக கண்ணில் போடவேண்டும் என்கிறார்.இப்படி தொடர்ச்சியாக நாற்பத்தெட்டு நாட்கள் செய்து வந்தால் கண்ணில் விழுந்துள்ள பூ அகன்று விடுமாம். இதற்கென சில பத்திய முறைகளும் உள்ளன, இந்த கால கட்டத்தில் உடலுறவு தவிர்க்க வேண்டுமாம். மேலும் சாதத்தில் சுடு நீரை விட்டு சாப்பிடச் சொல்கிறார். புளி, புகை போன்றவைகளும் தவிர்க்க வேண்டுமாம்.
எளிமையான அதே நேரத்தில் ஆச்சர்யமான தீர்வுதானே..... 
எனினும் அந்த காலகட்டத்தில் கிடைத்த பொருட்களைக் கொண்டு தேரையரால் அருளப் பட்ட இம் முறைகளை தற்போதை நவீன அறிவியலோடு இணைத்து ஆராய்ந்து மேம்படுத்தினால் எளிய செலவில்லாத மருத்துவ தீர்வு ஒன்றினை நம்மால் முன் வைக்க முடியும். ஆர்வமுள்ளவர்களும், ஆய்வாளர்களும் இது தொடர்பாய் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டால் நன்மை கிடைக்கும்.
இது ஒரு தகவல் பகிர்வு மாத்திரமே, தீர்வு இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.

மூச்சுக்கலை - பத்து வகையான காற்று!

மூச்சுக்கலை - பத்து வகையான காற்று!


அனைவருக்கும் இதயம் நிறைந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நமது உடலில் பத்து விதமான வாயுக்களாய் பிரிந்து நின்று, உடலின் செயல்பாடுகளில் பங்களிப்பதாக சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர். இவற்றில் ஏதேனும் ஒன்றின் செயல்பாட்டில் குறைபாடு உண்டானாலும் உடலின் ஆரோக்கியம் கெடும்.
அவை பற்றி சுருக்கமாய் இன்றைய பதிவில் காண்போம்.

பிராணன்

மூலாதாரத்தில் சேர்ந்து, இதயத்தில் நின்று மூக்கின் வழியே சென்று திரும்பி வரும் காற்று பிராணன் எனப்படுகிறது. இது மேல் நோக்கி இயங்கக் கூடியது. மற்ற ஒன்பது வகை காற்றுக்கும் ஆதார காற்று இதுதான்.

அபானன்

இது குதத்தை பற்றி நின்று நமது உடலின் கழிவுகளான மலம்,சிறு நீரை வெளியே தள்ளுகிறது. இது கீழ்நோக்கி இயங்கும் தன்மை உடையது.

வியானன்

நரம்புகளின் ஊடே நின்று உணர்வுகளை கடத்தும் வாயு வியானன் எனப்படுகிறது. மூளையின் கட்டளைகளை உறுப்புகளுக்கும், உணர்வுகளை மூளைக்கும் கொண்டு செல்லும் வாயு இது. இதனை தொழில் காற்று என்றும் கூறுவர்.

உதானன்

நமது நாபிக்கமலத்தில் நின்று, குரல் நான்களை அதிரச் செய்வதன் மூலம் ஒலியை எழுப்பும் காற்று உதானன் எனப்படும்.

சமானன்

நாம் உண்ணும் உனவினை ஜீரணித்து அதில் இருக்கும் சத்துக்களை பிரித்து இரத்தத்திற்கும்,உறுப்புகளுக்கும் தரும் காற்று சமானன் எனப்படும். இதற்கு நிரவல் காற்று என்றொரு பெயரும் உண்டு.

நாகன்

இது நமது உடலில் சேர்ந்த நச்சு உணவை புரட்டி வாய் வழியே வெளியே தள்ளும் காற்று இது. குமட்டல், வாந்தி போன்றவைகளை உருவாக்கிடும் காற்று நாகன் எனப்படுகிறது.

கூர்மன்

இது கண்ணில் நின்று அதன் இயக்கம் மற்றும் செயல்பாடுகளுக்கு துணை புரியும் காற்று. 
கிரிதரன்

இது நமது உடலில் நோய் தொற்றை உருவாக்கும் கிருமிகள், தூசி, துரும்பு, மாசு போன்றவைகளை உடம்பில் நுழைய விடாமல் தடுக்கும் காற்று. இதற்கு தும்மல் காற்று என்று பெயர்.

தேவதத்தன்

மூளைக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைதல்,அல்லது இரத்தத்தில் பிராணவாயுவின் அளவு குறைதல், அல்லது நுரையீரலில் புழங்கிடும் காற்றின் அளவு குறைதல், உடல் உறக்க நிலைக்கு தயாராகும் போது ஏற்படும் காற்று இது. கொட்டாவி, விக்கல் போன்றவை தோன்ற இந்த காற்றே காரணமாகிறது.

தனஞ்செயன்

மேலே சொன்ன ஒன்பது காற்றுகளும் நமது உடலில் இருந்து வெளியேறிய பின்னர் செயல்படும் காற்று இது. நமது உடலில் நுண்ணுயிரிகளைத் தூண்டி உடலை அழுகச் செய்து உடல் உப்பி வெடித்து வெளியேறும் என்கின்றனர். இதனை வீங்கல் காற்று என்றும் அழைப்பர்.

மூச்சுக் கலை - "சரம் பார்த்தல்"

மூச்சுக் கலை - "சரம் பார்த்தல்"


ஒரு சமையல் குறிப்பினை வாசிப்பதற்கும், அதனை ருசியோடு சமைத்தெடுப்பதற்குமான இடைவெளியில் அனுபவம் என்கிற ஒன்று தேவைப் படுகிறது. அந்த வகையில் இங்கே பகிரப் படும் தகவல் பகிர்வுகள் யாவும் ஒரு சமையல் குறிப்பின் தரத்திலானவையே, அதனை செயல்படுத்தி பலனடைய விரும்புகிறவர்கள் முறையான வழிகாட்டுதலோடு மேற்கொள்ளுமாறு வேண்டுகிறேன். 
முந்தைய குண்டலினி பதிவில் "இடகலை", "பிங்கலை", "சுழுமுனை" என மூன்று முக்கியமான நாடிகளை பார்த்தோம். இவை மூன்றும் சுவாச ஓட்டத்தின் பெயர்களே!
மூக்கின் இடது நாசிதுவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை எனப்படுகிறது. இதற்கு "சந்திரகலை" என்றொரு பெயரும் உண்டு. மூக்கின் வலது நாசியில் நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படுகிறது. இதற்கு சூரிய கலை என்றொரு பெயரும் உண்டு.
இரண்டு நாடிகளிலும் ஒருசேர நடக்கும் சுவாசத்திற்கு சுழுமுனை என்று பெயர்.
இதையே சர ஓட்டம் என்பர். இரண்டு ஆட்காட்டி விரல்களையும் மூக்கின் நடுத் தண்டில் பக்கத்திற்கு ஒன்றாக வைத்து இயல்பாய் மூச்சை விட எந்த நாசியில் மூச்சு ஓடுகிறது என்பதை எளிதாய் கண்டறியலாம்.
இந்த சுவாச நடை தொடர் இடைவெளிகளில் மாறும் தன்மை உடையது என சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர். அதாவது ஞாயிறு, செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் சூரியகலை அல்லது பிங்கலை அல்லது வலது நாசியில் சுவாசம் நடைபெற வேண்டுமாம். அதைப் போலவே திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் சந்திரகலை அல்லது இடகலை அல்லது இடது நாசியில் சுவாசம் நடை வேண்டுமாம்.
வளர் பிறையில் வரும் வியாழக் கிழமைகளில் இடகலையும், தேய் பிறையில் வரும் வியாழக் கிழமைகளில் பிங்கலை சுவாசமும் நடக்க வேண்டும் என்கின்றனர். இதன்படி சுவாசம் நடைபெற்று வந்தால் உடல் ஆரோக்கியமாய் இருக்குமாம். இதில் ஏதேனும் மாறுதல் வரும் போது உடல்நலம் கெடுகிறது என்கின்றனர் சித்தர் பெருமக்கள். 
திங்கள், புதன், வெள்ளிக் கிழமையில் ஓடவேண்டிய இடகலை சுவாசத்திற்கு பதிலாக பிங் கலை சுவாசம் ஓடினால் முறையே ஜலதோஷம், தலைவலி, கண், காது நோய்கள் உண்டாகுமாம்.
ஞாயிறு, செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் ஓட வேண்டிய பிங்கலை சுவாசத்திற்கு பதில் இடகலை சுவாசம் ஓடினால் முறையே இருமல், காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு, வயிற்றுப் போக்கு உண்டாகுமாம்.
இதன் அடிப்படையில்தான் வைத்தியர்கள் மருந்தினை தீர்மானிக்கும் முறை கூட இருந்தது. மருத்துவம் என்றில்லாமல் வாழ்வின் பிற செயல்களும் இந்த சர ஓட்டத்தினை வைத்தே தீர்மானிக்கப் பட்டது. இதனையே சரம் பார்த்தல் என கூறுவர். சரம் பார்த்தல் என்பது முற்காலத்தில் ஒரு வாழ்வியல் கூறாகவே இருந்திருக்கிறது. காலவோட்டத்தில் நாம் மறந்தே விட்டோம் என்பது வருத்தமான ஒன்று.

மூச்சுக் கலை - சுவாசித்தலின் வகைகள்

மூச்சுக் கலை - சுவாசித்தலின் வகைகள்


நமது உடற்கூறானது எலும்புகளின் மீதே கட்டமைக்கப் பட்டிருக்கிறது. எலும்புகளின் மேலே தசைகளும், இரத்த நாளங்கள் விரவி இருப்பதைப் போலவே, எலும்புச் சட்டகத்தின் உள்ளே முக்கியமான உள்ளுறுப்புகள் அமைந்திருக்கின்றன. இந்த எலும்புகள் யாவும் ஒன்றோடு ஒன்று தசைகளினாலும், நரம்புக்ளினாலும் பின்னிப் பிணையப் பட்டிருக்கின்றன. 
மேலே உள்ள படத்தில் மார்புக் கூட்டையும் அதனுள் பொருந்தியிருக்கும் நுரையீரலையும் காணலாம். நுரையீரலின் வெளிச்சுவர், மேலே கழுத்தெலும்புடனும், சுற்றிவர நெஞ்சுக்கூடு மற்றும் விலா எலும்புகளுடனும், கீழ் பகுதி உதரவிதானத்தோடு ஒட்டியிருப்பதைக் காணலாம். நமது நுரையீரல் விரிவடைவதையும், சுருங்குவதையும் இந்த பக்க உறுப்புகளே தீர்மானிக்கின்றன.
நம் நுரையீரலில் காற்று நிரம்புவதைப் பொறுத்து உயர் சுவாசித்தல், மத்திம சுவாசித்தல், கீழ் சுவாசித்தல், முழுமையான சுவாசித்தல் என நான்கு வகையான சுவாச முறைகள் இருப்பதாக பிரித்திருக்கின்றனர். இவற்றில் நாம் எந்த முறையில் சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை அறிய பின் வரும் விளக்கங்கள் உதவும்.
உயர் சுவாசித்தல் என்பதை கழுத்தெலும்பு சுவாசித்தல் எனக் கூறுவர். இந்த முறையில் விலா எலும்புகள், கழுத்தெலும்பு போன்றவைகளை மேலே உயர்த்துவதன் மூலம் நுரையீரலை விரிவடையச் செய்து காற்றினை உள்ளே இழுக்கும் முறை. இந்த முறையில் நிறைய உறுப்புகளை சிரமப் படுத்தி, குறைந்த அளவு காற்றையே நுரையீரலில் நிரப்புகிறோம். இன்னும் குறிப்பாக சொல்வதானால் நுரையீரலின் மேற்பகுதியில் மட்டுமே காற்று நிரம்புகிறது. பயனற்ற இம் முறையை தவிர்த்தல் வேண்டும்.
மத்திம சுவாசித்தல் என்பது விலா எலும்புகளை உயர்த்தி இயக்குவதன் மூலம் நுரையீரலை விரிவடையச் செய்வதாகும். இந்த முறையில் காற்று நுரையீரலின் மேல் மற்றும் மத்திய பகுதியில் மட்டுமே நிரம்பும். இதுவும் அத்தனை சிறப்பான சுவாச முறை இல்லை.
கீழ் சுவாசித்தல் அல்லது ஆழ்ந்த சுவாசித்தல் என்பது முதல் இரண்டு முறைகளை விடவும் மேம்பட்ட ஒன்று. இந்த முறையில் நமது நுரையீரலின் மேல், மத்திய மற்றும் கீழ் பகுதிகளில் காற்று நிரம்புகிறது. இதில் மார்புக் கூடு, உதரவிதானம், விலா எலும்புகள் ஆகியவை ஒத்திசைவுடன் இயங்குவதால் நிகழ்கிறது. சுவாச பயிற்சி செய்யும் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் இந்த நிலையை அடைய வேண்டி பயிற்சிகளை செய்யலாம்.
முழுமையான சுவாசித்தல் அல்லது யோகிகளின் சுவாசித்தல் என்பது சுவாசப் பயிற்சியின் உயர்நிலை. இந்த முறையில் நுரையீரலை முழுமையாக விரிவடையச் செய்வதன் மூலம் அதன் முழுக் கொள்ளளவுக்கு காற்றை நிரப்பி, அதில் இருக்கும் பிராண சக்தியை முழுமையாக பிரித்தெடுத்து இரத்தத்தில் கலக்கச் செய்வதாகும். இது முறையான தொடர் பயிற்சியினால் மட்டுமே சாத்தியமாகும்.
நம்மில் பெரும்பாலானவர்கள் முதல் இரண்டு வகை சுவாசக்காரர்களே! இதை உணர்ந்து சுவாசப் பயிற்சிகளை மேற்கொண்டால் நம் உடலையும், உயிரையும் மேம்படுத்தி நல் வாழ்வு வாழ்ந்திடலாம்.

மூச்சுக் கலை - குறை சுவாசத்தின் விளைவுகள்!

மூச்சுக் கலை - குறை சுவாசத்தின் விளைவுகள்!



ஒரு நிமிடத்தில் நாம் சராசரியாக 12 முதல் 14 தடவை மூச்சை உள்ளிழுத்து, உள் நிறுத்தி, வெளியிடுகிறோம். ஒரு முறை மூச்சினை உள்ளே இழுக்கும் போது குறைந்த பட்சம் அரை லிட்டர் காற்று உள்ளிழுக்கப் படுகிறது. இவை எல்லாம் இயல்பு நிலையில் நடை பெறும் மூச்சின் கூறுகள் ஆகும்.
ஒருவரின் உடல் அமைப்பு, உடலின் தேவை, உடலின் செயல்பாடுகளைப் பொறுத்து இந்த அளவு மாறுபடும். உடலமைப்பைப் பொறுத்து நுரையீரலின் கொள்ளளவும், உள்ளிழுக்கப் படும் காற்றின் அளவும் மாறுபடும்.
அடிப்படையில் நம்மில் எவருமே முழுமையான சுவாசம் செய்வதில்லை என்பதுதான் உண்மை. நமது நுரையீரலின் கொள்ளளவில் முப்பது விழுக்காடு மட்டுமே காற்றை உள்ளிழுத்து சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்கிறது ஆய்வுகள். இதனால் என்னவெல்லாம் எதிர் விளைவுகள் உண்டாகிறது என்பதை தெரிந்து கொண்டாலே மூச்சுக் கலையின் மகத்துவத்தை உணரமுடியும்.
குறைவான சுவாசத்தினால் நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளில் போதுமான அளவு காற்று நிரம்பிட வாய்ப்பில்லாமல் போகிறது. இதன் காரணத்தினால் நுரையீரல் தனது செயல்பாட்டினை முழுமையாக செய்ய முடியாமல் போவதால் இரத்ததில் உள்ள கழிவுகள் முழுமையாக நீக்கப் படாமலும், குறைவான பிராண வாயுவையும் சுமந்து கொண்டு மீண்டும் உடலினுள் பாய்கிறது. 
இப்படி கழிவுகளை சுமந்து கொண்டு செல்லும் இரத்தத்தினால், அது உடலில் செய்ய வேண்டிய பணிகளை முழுமையாக செய்ய முடியாமல் போகிறது. இதன் தாக்கம் எல்லா உறுப்புகளின் செயல்பாடுகளிலும் கணிசமான பாதிப்பினை உண்டாக்குகிறது.
இதன் தாக்கம் மூளையின் செயல்பாட்டினை மந்தமாக்குவதில் துவங்குகிறது. நாம் உட் கொள்ளும் உணவை முழுமையாக ஜீரணிக்க முடியாமல், அதில் உள்ள சத்துக்களை பிரித்தெடுப்பதில் குறைபாடுகள் உண்டாகிறது. இதனால் உறுப்புகளின் செயல்பாடுகள் குறைவதனால் உடலின் கழிவுகள் வெளியேறாமல் தேங்கி நோய் உண்டாக்குவது வரை நீள்கிறது.
"வெறும் மூச்சுதானே", என நாம் அசட்டையாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு செயலுக்குப் பின்னால் எத்தனை பெரிய பாதிப்புகள் காத்திருக்கிறது என்பதை உணர்த்திட வேண்டியே இத்தனை நீண்ட அறிமுகம் தேவையாகிறது. இந்த பாதிப்புகளை நம் மூச்சினை சீர் படுத்துவதன் மூலம் எளிதில் சரி செய்யும் வாய்ப்பிருக்கிறது என்பதை மனதில் கொள்ளுங்கள். 
இனி வரும் பதிவுகளில் மூச்சுக் கலையின் அறிவியல் அதனை கை கொள்ளுதல், மேம்படுத்துதல் போன்றவைகளைப் பற்றி பார்ப்போம்.
அந்த வகையில் முதலில் நாம் எப்படி சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிதல் அவசியம். ஆய்வுகளின் அடிப்படையில் நான்கு விதமான சுவாசத்தினை நாம் மேற்கொண்டிருக்கிறோம் என பட்டியலிட்டிருக்கின்றனர். 
அவை...
உயர் சுவாசித்தல்
மத்திம சுவாசித்தல்
கீழ் சுவாசித்தல்
முழுமையான சுவாசித்தல்

மூச்சுக்கலை - வாய்வழி சுவாசம்

மூச்சுக்கலை - வாய்வழி சுவாசம்


நாம் எதை செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளவதைப் போலவே, எதை செய்யக் கூடாது என்பதையும் அறிந்து கொண்டோமானால், நம்முடைய பாதி இடர்பாடுகளை எளிதில் களைந்து விட முடியும்.
அந்த வகையில் இன்று வாய்வழி சுவாசம் பற்றி பார்ப்போம்.
மூக்கு வழி சுவாசம் நடக்கும் போது எதற்காக வாய்வழி சுவாசம் என்ற கேள்வி வருவது இயல்பே. சுவாசப் பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று அல்லது வேறு காரணங்களினால் மூக்கின் வழியே சுவாசிக்க இயலாத சூழலில், அல்லது தவிர்க்கவே இயலாத தருணங்களில் ஒரு மாற்றாக வாய்வழி சுவாசம் அமைந்திருக்கிறது.
மூக்கின் வழியே சுவாசிக்கும் போது உள்ளிழுக்கப் படும் காற்றில் உள்ள தூசுக்கள், மூக்கின் உட்புறம் அமைந்துள்ள நுண்ணிய ரோமங்களினால் வடிகட்டப் படுகிறது. இதற்கு அடுத்த நிலையில் Mucus திசுக்கள் காற்றில் உள்ள உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை தடுத்து விடுகிறது. 
இந்த நிலையில் வடிகட்டப்பட்ட காற்றானது, வெதுவெதுப்பாக்கப் பட்டு சுவாச குழாய்களுக்குள் அனுப்பப் படுகிறது.மூக்கின் வழி சுவாசத்தில் காற்றானது இத்தனை தரக் கட்டுப்பாடுளை எதிர்கொள்கிறது. இவ்வாறு அனுப்பப் படும் காற்றானது நுரையீரலை அடையும் போது தூய்மையானதாகவும், செறிவானதாகவும் இருக்கிறது.
ஆனால் வாய்வழி சுவாசத்தில் இவை எதுவும் இல்லாமல், காற்று நேரடியாக சுவாசகுழாய்களில் பாய்கிறது. தூய்மை செய்யப் படாத குளிர்ந்த் காற்று நுரையீரலில் பாயும் போது அங்கே ஒவ்வாமையும், தேவையற்ற தொற்றுகளும் உண்டாகிறது.இதனால் என்ன விளைவுகள் உண்டாகும் என்பதை இன்னேரம் நீங்களே யூகித்திருப்பீர்கள். 
ஆம், நாம் எதிர் கொள்ளும் பற்பல நோய்களுக்கு மூல காரணம் இந்த வாய்வழி சுவாசம்தான். இவை எல்லாம் ஒரே நாளில் வருவதில்லை, ஆண்டாண்டு கால வாய்வழி சுவாசத்தின் விளைவே இந்த நோய்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டுகிறேன். 
நம்மில் கணிசமானவர்கள் வாய்வழி சுவாசக்காரர்கள் என்பது வருத்தமான செய்தி. இதை நாம் உணராமலே செய்து கொண்டிருக்கிறோம். இதை உணர்ந்து வாய் வழி சுவாசத்தை நிறுத்துவது என்பதும் நம் கையில்தான் உள்ளது. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே இதை கவனித்து கூறி திருத்தினால் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். 
உறங்கும் போதும் பலர் வாய்வழி சுவாசத்தையே கொண்டிருக்கிறோம். இதனை தவிர்க்க உறங்கும் போது தலை முன்னால் வந்து கவிழ்ந்த நிலையில் உறங்கப் பழகினால் வாய்வழி சுவாசத்தை எளிதில் தவிர்க்க முடியும். தொடர்ச்சியன வாய் வழி சுவாசத்தினால் மூக்கில் உள்ள நாசி துவாரங்கள் பயன்பாடு இல்லாமல் நோய் தொற்றுக்கு ஆளாகி விடும் வாய்ப்பு இருக்கிறது. இது மேலும் தேவையற்ற துயரங்களையே தரும்.
மூக்கு வழி சுவாசம் உடலுக்கும், உயிருக்கும் புத்துணர்ச்சியைத் தருகிறது. மாறாக வாய்வழி சுவாசம் உடலுக்கும், உயிருக்கும் நோய்களையும், அசதியையுமே கொண்டு தரும் என்பதால் உடனடியாக சுவாச முறையை ஆராய்ந்து நாசி வழி சுவாசத்தினை மேற்கொள்ளுதல் அவசியம்.

மூச்சுக்கலை - சுவாசத்தின் மகத்துவம்!

மூச்சுக்கலை - சுவாசத்தின் மகத்துவம்!


நமது உடலையும், உயிரையும் பிணைத்திருப்பதும், அவற்றை வளர்த்தெடுப்பதும் சுவாசம் என்றால் அது மிகையில்லை. மனித உடலில் உற்பத்தியாகும் 60-80 விழுக்காடு கழிவுகள் சுவாசத்தின் வழியேதான் வெளியேறுகிறது என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திராத தகவல். 
இந்த தகவலை நவீன அறிவியலும் உறுதி செய்கிறது. நமது முன்னோர்கள் அறிவியல் வளராத ஒரு காலகட்டத்தில் சுவாசத்தின் அருமை பெருமைகள் உணர்ந்து தெளிந்து அதனை நெறிப் படுத்தும் ஒரு கலையினை காலம் காலமாய் வளர்த்தெடுத்திருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் ஆச்சர்யமும், பெருமிதமும் கொள்ளக் கூடிய ஒன்று.
பிறந்த கணத்தில் இருந்து கடைசி மூச்சு வரையிலும் தொடர்ச்சியான வினைகளினால் ஆனதே நம் வாழ்க்கை. வினைகளும், அதன் எதிர் வினைகளுமே ஒருவரின் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்கின்றன. இதனை நல்வினை, தீய வினை என பொதுவில் பகுத்தாலும்... இவற்றை உருவாக்குவதும், அதில் உழல்வதும் நமது மனமே!, உடலுக்கு ஆற்றல் தர ரத்தம் ஓடுவதைப் போல, உள்ளத்துக்கு ஆற்றல் தருகிறவை எண்ணங்கள்.
இந்த எண்ணங்களை இந்திய வேத மரபு சம்ஸ்காரங்கள் என்கிறது. இவற்றை அழிப்பதே ஞானத்தின் உயர்நிலை. இரத்தத்தில் இருக்கும் கழிவுகளை அகற்றி அதை வலுவேற்றுகிற சுவாசம், நமது எண்ணங்களையும் சீர்படுத்தி, தேவயற்றவைகளை அழித்து மனதை மேம்படுத்துகிறதென நம் முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். இதனை "துக்க நிவர்த்தி" என்கின்றனர்.
ஆச்சர்யமான தகவல்தானே.....
அமைதியான மன நிலையில் நமது சுவாசம் எத்தகையதாய் இருக்கிறது, அதே நேரத்தில் துக்கம், பதட்டம், கொண்டாட்டம் போன்ற மன நிலைகளில் நமது சுவாசம் எத்தகையதாய் இருக்கிறது என்பதை இதுவரை கவனிக்கா விட்டாலும், இனி கவனித்துப் பாருங்கள்.
ஆம், சுவாசத்தின் துணை கொண்டு நமது எண்ணங்களையும் தூய்மை செய்திட முடியும் என்பதை நமது முன்னோர்கள் நிரூபித்திருக்கின்றனர். அத்தகைய வழி முறைகளை இந்த தொடரின் நெடுகே பகிர்ந்து கொள்கிறேன்.
இந்நேரத்திற்கு உங்களுக்குள் ஒரு கேள்வி வந்திருக்கக் கூடும். அது, மூக்கினால் மட்டும்தான் சுவாசிக்க முடியுமா?, வாயினால் கூட சுவாசிக்கலாமே!, அது பற்றிய தகவல் ஏதும் இருக்கிறதா என்கிற கேள்விகள் வந்திருக்கும்.

மூச்சுக்கலை - சுவாசம் எப்படி நடக்கிறது?

மூச்சுக்கலை - சுவாசம் எப்படி நடக்கிறது?


மூச்சுக் கலையின் நுட்பங்களை அலசுவதற்கு முன்னர், மூக்கின் வழியே சென்று வரும் காற்று நமது உடலில் என்னவெல்லாம் செய்கிறது என்பதை அறிவது அவசியம். இந்த அடிப்படைகளை புரிந்து கொண்டால் மட்டுமே மூச்சுக் கலையின் அறிவியலை, அதன் நுட்பத்தை உணர முடியும்.
மூக்கின் வழியே உள் இழுக்கப்படும் காற்றில் உள்ள சிறு துகள்கள் மூக்கின் உட்புறம் இருக்கும் நுண்ணிய ரோமங்களினால் வடிகட்டப்படுகிறது. இந்த நிலையில் மூக்கினுள் இருக்கும் திசுக்கள் காற்றை வெதுவெதுப்பாக்கி குரல்வளை எனும் குழாய் பகுதிக்கு அனுப்புகிறது. 
குரல்வளையின் ஊடே செல்லும் காற்று கீழிறங்கி மூச்சுக் குழாய்களுக்குள் செல்கிறது. இந்த மூச்சுக் குழாய்கள் ஆறுகள் பிரிவதைப் போல பல்லாயிரம், பல லட்சம் கிளை குழாய்களாய் பிரிந்து நுரையீரலுக்குள் செல்கிறது.
அதென்ன நுரையீரல்....
நுரையீரல் என்பது நமது மார்பகத்தின் இரண்டு பக்கத்திலும் அமைந்திரும் பெரிய காற்றுப் பைகள் என்று சொல்லலாம். கீழே உள்ள படத்தில் இருக்கும் உறுப்புதான் நுரையீரல்.

இது சுருங்கி விரியும் தன்மையுடைய தசையால் அமையப் பெற்றது இதன் உள்ளே கோடிக் கணக்கான நுண்ணிய காற்றறைகள் உள்ளது. மூச்சுக் குழாய்கள் வழியே செல்லும் காற்றானது இந்த காற்றறைகளில் நிரம்பி சுழன்று கொண்டிருக்கும்.
எல்லாம் சரிதான்!, நுரையீரல் இந்த காற்றை வைத்துக் கொண்டு என்ன செய்கிறது?
இந்த இடத்தில், இதயம் பற்றியும், இரத்த ஓட்டம் பற்றியும் சுருக்கமாய் பார்ப்பது அவசியமாகிறது. நமது உச்சந்தலை முதல், உள்ளங்கால் வரை நீக்கமற நிரம்பியிருக்கும் பல லட்சம் மெல்லிய குழாய்களின் வழியே இரத்தமானது தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கிறது. 
இந்த இரத்தமே நமது உடலின் அத்தனை உறுப்புகளின் இயக்கம் மற்றும் செயல்பாட்டிற்குத் தேவையான ஆற்றலை கொடுக்கிறது. இந்த இரத்த ஓட்டம் முழுவதையும் இதயம் கட்டுப் படுத்துகிறது. அதாவது இதயத்தில் இருந்து கிளம்பி மீண்டும் இதயத்திற்கே வந்து சேரும் வகையில் இரத்த ஓட்டம் அமைந்திருக்கிறது.
தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் இரத்தமானது உறுப்புகளுக்குத் தேவையான ஜீவ சக்தியை கொடுத்துவிட்டு, அவற்றின் கழிவுகளை சுமந்து கொண்டு இதயத்திற்கு திரும்பி வருகிறது. கழிவுகளை சுமந்து வரும் இந்த இரத்தத்தை சுத்திகரிக்கும் பொருட்டு நுரையீரலில் உள்ள கோடிக் கணக்கான காற்றுப் பைகளுக்கு மெல்லிய தந்துகி குழாய்களின் மூலம் அனுப்புகிறது. 
நுரையீரலில் நாம் முன்னரே பார்த்த நுண்ணிய காற்றுப் பைகளில் இந்த இரத்தம் நிரம்பும் போது நுரையீரலானது, இரத்தத்தில் இருக்கும் கழிவுகளையும், கரியமில வாயுவையும் பிரித்து எடுத்துவிட்டு, காற்றுப் பைகளில் நிரம்பியிருக்கும் காற்றில் உள்ளப்ராண சக்தி எனப்படும் ஆக்சிஜனை இரத்தத்தில் நிரப்பி மீண்டும் இதயத்திற்கு அனுப்புகிறது.
இந்த நிலையில் இரத்தத்தில் கழிவாய் வந்த கரியமில வாயுவை சுமந்து கொண்டு மூச்சுக் காற்று முதலில் சொன்ன சுவாசக் குழாய்களின் வழியே மீண்டு குரல்வளை வழியே மேலேறி மூக்கின் வழியே வெளியேறுகிறது. 
காற்றை உள்ளிழுத்தல், உள் நிறுத்துதல், வெளியேற்றுதல் என்கிற இந்த மூன்று நிகழ்வுகளின் பின்னே நமது உடலில் இத்தனை பெரிய வேலை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.

ப்ராணயாமம் என்னும் மூச்சுக்கலை

ப்ராணயாமம் என்னும் மூச்சுக்கலை


உயிரின் ஆதாரம் சுவாசம் எனப்படும் மூச்சு. பிறந்த நொடியில் இருந்து இறுதி மூச்சு வரை இந்த சுவாசம் நமது உடலின் ஊடே ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னமும் தீர்க்கமாய் சொல்வதானால் இந்த சுவாசம்தான் வாழ்க்கை. இந்த உண்மையை நாம் அறிந்திருக்கும் அளவுக்கு அதை உணரவில்லை என்பதே உண்மை.
இது பற்றி விரிவாய் எழுதுவதாய் முன்னரே குண்டலினி தொடரில் குறிப்பிட்டிருந்தேன். அதன் அடிப்படையில் இனி வரும் நாட்களில் இந்த மூச்சுக்கலை பற்றிய தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
ப்ராணன் என்றால் மூச்சு, யாமம் என்றால் ஒழுங்கு செய்தல் ஆகும். யோக நெறியில் நான்காவது படிநிலையாக ப்ராணயாமத்தை பதஞ்சலி முனிவர் அருளியிருக்கிறார். இந்த மூச்சு நமது உடலில் மூன்று கட்டமாய் நிகழ்கிறது.
மூச்சை உள்ளே இழுத்தல், இதனை "பூரகம்" என்கின்றனர்.
மூச்சை உள்ளேநிறுத்துதல், இதனை "கும்பகம்" என்கின்றனர்.
மூச்சை வெளியேற்றுதல், இதனை "ரேசகம்" என்கின்றனர்.
இந்த மூன்று செயல்களும் தொடர்ந்து சீரான தாள கதியில் நம்முடலில் ஓடிக் கொண்டேயிருக்கிறது. இந்த மூன்று நிகழ்வுகளின் ஊடே செய்யப் பட்ட பல்வேறு பரிசோதனைகளின் திரளே ப்ராணயாமம் எனப்படும் மூச்சுக் கலை.
நவீன அறிவியலின் படி நமது உடலில் ஒரு நிமிடத்தில் 15 முதல் 20 முறை சுவாசம் நடக்கிறது. உறங்கும் போது இதன் அளவு 10 முதல் 12 ஆக குறைகிறது. ஆழ்நிலை தியானம் போன்றவைகளைச் செய்யும் போது இந்த அளவு இன்னும் பாதியாகக் குறைந்து விடுகிறது. 
எல்லாம் சரிதான், இந்த மூச்சு நமது உடலில் எப்படி நடக்கிறது?