Friday 13 April 2012

மூச்சுக்கலை - பத்து வகையான காற்று!

மூச்சுக்கலை - பத்து வகையான காற்று!


அனைவருக்கும் இதயம் நிறைந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நமது உடலில் பத்து விதமான வாயுக்களாய் பிரிந்து நின்று, உடலின் செயல்பாடுகளில் பங்களிப்பதாக சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர். இவற்றில் ஏதேனும் ஒன்றின் செயல்பாட்டில் குறைபாடு உண்டானாலும் உடலின் ஆரோக்கியம் கெடும்.
அவை பற்றி சுருக்கமாய் இன்றைய பதிவில் காண்போம்.

பிராணன்

மூலாதாரத்தில் சேர்ந்து, இதயத்தில் நின்று மூக்கின் வழியே சென்று திரும்பி வரும் காற்று பிராணன் எனப்படுகிறது. இது மேல் நோக்கி இயங்கக் கூடியது. மற்ற ஒன்பது வகை காற்றுக்கும் ஆதார காற்று இதுதான்.

அபானன்

இது குதத்தை பற்றி நின்று நமது உடலின் கழிவுகளான மலம்,சிறு நீரை வெளியே தள்ளுகிறது. இது கீழ்நோக்கி இயங்கும் தன்மை உடையது.

வியானன்

நரம்புகளின் ஊடே நின்று உணர்வுகளை கடத்தும் வாயு வியானன் எனப்படுகிறது. மூளையின் கட்டளைகளை உறுப்புகளுக்கும், உணர்வுகளை மூளைக்கும் கொண்டு செல்லும் வாயு இது. இதனை தொழில் காற்று என்றும் கூறுவர்.

உதானன்

நமது நாபிக்கமலத்தில் நின்று, குரல் நான்களை அதிரச் செய்வதன் மூலம் ஒலியை எழுப்பும் காற்று உதானன் எனப்படும்.

சமானன்

நாம் உண்ணும் உனவினை ஜீரணித்து அதில் இருக்கும் சத்துக்களை பிரித்து இரத்தத்திற்கும்,உறுப்புகளுக்கும் தரும் காற்று சமானன் எனப்படும். இதற்கு நிரவல் காற்று என்றொரு பெயரும் உண்டு.

நாகன்

இது நமது உடலில் சேர்ந்த நச்சு உணவை புரட்டி வாய் வழியே வெளியே தள்ளும் காற்று இது. குமட்டல், வாந்தி போன்றவைகளை உருவாக்கிடும் காற்று நாகன் எனப்படுகிறது.

கூர்மன்

இது கண்ணில் நின்று அதன் இயக்கம் மற்றும் செயல்பாடுகளுக்கு துணை புரியும் காற்று. 
கிரிதரன்

இது நமது உடலில் நோய் தொற்றை உருவாக்கும் கிருமிகள், தூசி, துரும்பு, மாசு போன்றவைகளை உடம்பில் நுழைய விடாமல் தடுக்கும் காற்று. இதற்கு தும்மல் காற்று என்று பெயர்.

தேவதத்தன்

மூளைக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைதல்,அல்லது இரத்தத்தில் பிராணவாயுவின் அளவு குறைதல், அல்லது நுரையீரலில் புழங்கிடும் காற்றின் அளவு குறைதல், உடல் உறக்க நிலைக்கு தயாராகும் போது ஏற்படும் காற்று இது. கொட்டாவி, விக்கல் போன்றவை தோன்ற இந்த காற்றே காரணமாகிறது.

தனஞ்செயன்

மேலே சொன்ன ஒன்பது காற்றுகளும் நமது உடலில் இருந்து வெளியேறிய பின்னர் செயல்படும் காற்று இது. நமது உடலில் நுண்ணுயிரிகளைத் தூண்டி உடலை அழுகச் செய்து உடல் உப்பி வெடித்து வெளியேறும் என்கின்றனர். இதனை வீங்கல் காற்று என்றும் அழைப்பர்.

No comments:

Post a Comment